இதுதான் திமுக! குஷ்பு விஷயத்தில் அதிரடி! சுட்டிக்காட்டி பாஜகவை சீண்டிய தர்மபுரி எம்பி! கவனீச்சிங்களா
சென்னை: பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு பற்றி அவதூறாக பேசிய திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் திமுகவின் அதிரடி நடவடிக்கையை சுட்டிக்காட்டி தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார், பாஜகவை சீண்டியுள்ளார்.
திமுக பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசினார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதன்பிறகு மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்டார். இதையடுத்து அவர் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வழக்கம்போல் பேச்சை தொடர்ந்தார். இதற்கிடையே தான் கருணாநிதியின் 100 நாள் பிறந்தநாள் விழா கூட்டத்தில் மீண்டும் சிவாஜி கிருஷ்ணமமூர்த்தி சர்ச்சையாக பேசினார்.

பாஜகவை சேர்ந்தரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பற்றி அவர் குறிப்பிட்ட கருத்துகள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தன. இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். குஷ்பு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கும் எனவும் கூறியிருந்தார்.
மேலும் குஷ்பு கண்கலங்கியபடி, ‛பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கருணாநிதி இருந்தபோது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம்'' என ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து அடுத்த சிறிது நேரத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இந்நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக எடுத்த நடவடிக்கையை குறிப்பிட்டு தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் பாஜகவை சீண்டியுள்ளார்.
அதாவது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக எம்பியான செந்தில் குமார், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சை ஏற்கனவே கண்டித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பெண்களை பற்றி தவறாக யார் பேசினாலும் அது மிகவும் கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எந்த கட்சியினை சார்ந்தவர்களாக ஆக இருந்தாலும் சரி'' என தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே தான் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்ட செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த செந்தில் குமார் எம்பி, ‛‛வரவேற்கத்தக்கது. பாஜகவை போல அல்ல திமுக. பார்வைக்கு வந்த உடன் நடவடிக்கை. சட்ட நடவடிக்கை தொடரும். பாஜகவில் பெண்களை தவறான பேசிய ஒரு நபர் கைது மீதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? எடுக்கமாட்டார்கள்'' என பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications