Sasikala: அதிமுக ரத்தத்தை உறிஞ்சி! பல ஆயிரம் கோடிக்கு சசிகலா அதிபதி! கே.பி.முனுசாமி விமர்சனம்
கிருஷ்ணகிரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அப்படியே சசிகலா ஒதுங்கிக்க வேண்டியதுதானே! அரசியலுக்கு வரமாட்டேன் என கடிதம் எழுதி கொடுத்துவிட்டு தற்போது அரசியலுக்கு வந்தது ஏன் என முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக சார்பில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்தவர் சசிகலா.

கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான சொத்து சேர்த்த ஒரு குடும்பம், இன்று எடப்பாடி பழனிசாமி மீது கொலை முயற்சி பழி சுமத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தர்மம் தன் வேலையைச் செய்ததால்தான் அவர் சிறை செல்ல நேரிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 56 கொலைகள் நடந்துள்ளன. போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதே இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடக் காரணம். திமுக பிரமுகரின் மகன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிசிடிவி ஆதாரங்களை மறைக்கக் காவல் துறை முயற்சிக்கிறது.
மக்களை பற்றி சிந்திக்காமல் தன் குடும்பத்தின் வருமானம் மற்றும் அடுத்த முதல்வர் நாற்காலி பற்றி மட்டுமே ஸ்டாலின் சிந்திக்கிறார். இவ்வாறு கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
வி.கே.சசிகலா, கடந்த 24 ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பொரித்த கொடியை தனது கட்சி கொடி என அறிமுகப்படுத்தினார். எனினும் கட்சியின் பெயரை பிறகு சொல்வதாக தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சசிகலா பேசுகையில், "ஜெயலலிதா பிறந்தநாளில் நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, ஓபிஎஸ் முதல்வரானார். அவர் மீது எந்த குறையும் இல்லை. அவர் சரியாகத்தான் செயல்பட்டார்.
ஆனால் சில நாட்கள் கழித்து ஒரு கும்பல் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்து என்னிடம், "ஓபிஎஸ் சரியில்லை" என்றார்கள். அதற்கு நான் நன்றாகத்தானே செயல்படுகிறார் என கூறினேன்.
"நீங்கள் இப்போதே பொதுச் செயலாளராக வேண்டும். முதல்வராக வேண்டும்" என என்னிடம் கூறியிருந்தார்கள், காலையிலும் மாலையிலும் போயஸ் கார்டனுக்கு நடந்தார்கள். பொதுக் குழுவைக் கூட்டி என்னை பொதுச் செயலாளராக நியமனம் செய்து அதிமுக அலுவலகத்திற்கு கூட்டிச் சென்றனர்.
என்னை பெங்களூர் சிறையில் இருந்து சென்னைக்கு மாற்றிக் கொள்ளுமாறு சில முன்னாள் அமைச்சர்கள் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் எதற்காக வேண்டாம் என்றேன். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கும் போது நான் சென்னை சிறைக்கு வந்துவிட்டால், அதை வைத்து திமுக பிரச்சினை செய்யும். எனவே எதற்கு இந்த பிரச்சனை, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், ஆட்சியை சிறப்பாக நடத்துங்கள் என்றேன்.
ஆனால் அவர்கள் பேச்சை கேட்டு நான் சென்னை சிறைக்கு சென்றிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பேனா என தெரியவில்லை என சசிகலா அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். மேலும் முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்த என் முதுகில் குத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு சசிகலா விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications