இலவச மின்சாரத்தை பறிக்க நினைத்தால்... மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும்... தமிழக காங்கிரஸ் எச்சரிக்கை
சென்னை: விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பறிக்க நினைத்தால் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் சலுகையல்ல என்றும் அது ஒரு உரிமை எனவும் கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
குறுவை பாசனத்திற்காக... மேட்டூர் அணையை காலதாமதமின்றி திறக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
பேராபத்து
மத்திய பா.ஜ.க. அரசின் நிதித்துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிற சுற்றறிக்கையினால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக விவசாயிகள், நெசவாளர்கள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரத்திற்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த சுற்றறிக்கையின் மூலம் இலவச மின்சாரத்திற்காக மாநில அரசு ஒதுக்குகிற மானியம் விவசாயிகளின் வங்கிகணக்கில் நேரடி பயன்மாற்ற திட்டத்தின் மூலம் செலுத்தலாம். ஆனால் இலவசமாக மின்சாரத்தை வழங்கக்கூடாது. அப்படி தொடர்ந்து வழங்கப்படுமேயானால் தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்குவதற்காக இருக்கும் சலுகைகள் பெருமளவில் குறைக்கப்படும் என்று நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
கடன் வரம்பு
சமீபத்தில் நிதியமைச்சரின் அறிவிப்பின்படி மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் திரட்டுவதற்கான வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மாநில அரசின் கடன் வரம்பு ரூ. 62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் கோடியாக உயர்த்திக்கொள்ள முடியும். அப்படி உயர்த்துவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகளில் முக்கியமானது விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக்கூடாது. அப்படி வழங்கப்படுமேயானால் மத்திய அரசின் உயர்த்தப்பட்ட கடன் வரம்பு குறைக்கப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
முதல்வர் கடிதம்
விவசாயிகள், குடிசை வாசிகள், கைத்தறி நெசவாளர்கள் பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய மின்சார சட்டதிருத்தத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பிறகு தற்போது மத்திய நிதியமைச்சகம் இத்தகைய சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப்படுத்தியிருக்கிறது.
விவசாயிகளின் உரிமை
11 லட்சம் குடிசைகளுக்கும், 77 ஆயிரத்து 100 கைத்தறி நெசவாளர்களுக்கும், 22 லட்சம் பம்ப் செட்டுகள் மூலமாக விவசாயிகளுக்கும் 2.1 கோடி ஏழை எளிய மக்களுக்கு சலுகை கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றுப்பாசனத்தில் விவசாயிகள் இலவசமாக நீர்ப்பாசனம் பெறுகிற உரிமையை கிணற்றுப்பாசன விவசாயிகளுக்கும் வழங்கி சமநிலைதன்மை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டதே இலவச மின்சாரம். எனவே இலவச மின்சாரம் என்பது சலுகையல்ல. அது ஒரு உரிமை. அதை பறிக்க முயல்கின்ற மத்திய அரசின் முயற்சியை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.