26 ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் அது மட்டும் ஏன் என தெரியவில்லை.. குஷ்பு உருக்கம்
சென்னை: 26 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் சுந்தர் சியின் காதலை எதை வைத்து உடனே ஏற்றுக் கொண்டேன் என்பது இன்னும் தெரியவில்லை என நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டரில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு- 1980 களில் பல இளைஞர்களது கனவுக் கன்னியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பெரும்பாலான மொழிகளில் வலம் வந்தவர்.
இவர் இயக்குநர் சுந்தர் சி- யின் திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது இவருக்கும் இயக்குநருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 5 ஆண்டுகள் கழித்து இருவரும் 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தயாரிப்பு
இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். வெள்ளித்திரை, தயாரிப்பு நிறுவனம், சின்னத்திரை, விளம்பரம் என பிஸியாக இருக்கும் குஷ்பு அரசியலிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். முதலில் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் பணியாற்றிவிட்டு மனக்கசப்பு காரணமாக 2020-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
குஷ்பு
இவர் சமூகவலைதளங்களிலும் படு ஆக்டிவ்வாக இருக்கிறார். இவர் தனது ட்விட்டில் ஒரு உருக்கமான பதிவை போட்டுள்ளார். அதில் சுந்தர் சியுடன் குஷ்பு இருக்கும் ஒரு படப்பிடிப்பு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதாவது 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுந்தர் சி, குஷ்புவிடம் காதலை சொன்னது குறித்து பதிவிட்டுள்ளார்.
எது காதல்
அதில் சுந்தர் சி காதலைக் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவுகள் சிறப்பாக அமையும் என்று சொல்வார்கள்.
மகிழ்ச்சி
அதையேதான் நானும் செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் குஷ்பு. எந்த நடிகைக்கும் இல்லாத வரவேற்பாக இவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டியிருந்தனர். ஒவ்வொரு உணவு பொருளுக்கும் இவரது பெயரை வைத்தனர். குஷ்பு இட்லி, குஷ்பு சர்பத்.. இதில் குஷ்பு இட்லி இன்னும் பிரபலம்தான்.