பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமனமா.. அப்படினா வரவேற்கிறேன்.. எல்.முருகன் ரிப்ளை!
சென்னை: பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளாரா? அது பற்றி நான் இன்னும் பார்க்கவில்லை. அப்படி வந்திருந்தால் வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார் மத்திய அமைச்சர் எல்.முருகன்.
தேர்தல் வியூக நிபுணரும் அரசியல்வாதியுமான பிரசாந்த் கிஷோரை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக நியமித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு போலியான அறிக்கை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சுராஜ், பாஜக வெளியிட்டுள்ள கடிதம் என்று கூறி இணையத்தில் பகிரப்பட்டு வரும் அந்த அறிக்கை போலியானது என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஜன் சுராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் போலியான செய்திகளைப் பற்றிப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு தலைவரும், மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் தனிப்பட்ட முறையில் பிரசாந்த் கிஷோர் பற்றிய ஒரு போலி ஆவணத்தை எப்படிப் பரப்புகிறார் என்பதை இப்போது நீங்களே பாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தமது கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோரை நியமித்ததாகக் கூறும் பாஜக லெட்டர்ஹெட் படம் வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று பிரபல நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பிரசாந்த் கிஷோர், இந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் வெற்றி கிடைக்கும் என்று கணித்ததை அடுத்து அந்த புகைப்படம் வெளியாகி வைரலானது.
கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போது பாஜகவுக்காக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த பிரசாந்த், கிஷோர், இந்தத் தேர்தலில் பாஜக பெறும் சீட்களின் எண்ணிக்கை அதன் 2019 எண்ணிக்கையான 303 அல்லது அதை விட அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியால் 100 இடங்கள் கூட பெற முடியாது. வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பாஜகவுக்கு சேதம் ஏற்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை. வடக்கு மற்றும் மேற்கில் பாஜக எத்தனை இடங்களை இழந்தாலும் அவற்றை அது கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் இருந்து பெற்றுவிடும். வடக்கு மற்றும் மேற்கில் பாஜக 50 இடங்களை இழந்தாலும், கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள வெற்றிகளின் மூலம் அதை அக்கட்சி ஈடுசெய்யும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்தே, பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தகவலை பரப்பியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவல் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அப்படி அறிவித்திருக்கிறார்களா.. அது பற்றி நான் இன்னும் பார்க்கவில்லை. அப்படி வந்திருந்தால் வரவேற்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய எல்.முருகன், லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மிகப்பெரிய வெற்றிய பெறும். மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றார் என உறுதி செய்யபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications