கோவில் நிலம்.. பட்டா பெயர் மாற்றம் சாத்தியமா? சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: கோவிலில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமாக மேலமடை கிராமத்தில் உள்ள 1.83 ஏக்கர் நிலம் அந்த கோவிலின் பட்டராக இருந்த லக்ஷ்மணா என்பவருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அவர் அந்த நிலத்தை வேறு நபர்களின் பெயருக்கு எழுதி வைத்தார். அதனை மாவட்ட ஆட்சியரும் தனது உத்தரவில் உறுதி செய்தார்.

இதனை எதிர்த்து அழகர் கோவில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செயப்பட்டது. மனு நிலுவையில் இருக்கும் போதே லக்ஷ்மண பட்டர் காலமானார்.
மனு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான கோவில் தரப்பு வழக்கறிஞர், கோவிலில் அர்ச்சனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதை ஒப்புக்கொண்டதற்காக மட்டுமே லக்ஷண பட்டருக்கு நிலம் ஒதுக்கப்பட்டதாகவும் அதனை மற்றவருக்கு மாற்ற விற்க அதிகாரமில்லை என வாதிடப்பட்டது.
பட்டா வழங்கப்பட்டிருந்தாலும் கூட மற்றவருக்கு விற்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இடமில்லை என வாதிட்டார்.

மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சட்ட விதிகளையும் ஆய்வு செய்தே மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததாகவும், இந்த மனுவை நிராகரிக்க வேண்டுமென வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி கோவிலில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது என கூறி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தார்.












Click it and Unblock the Notifications