இவ்வளவு முயற்சித்தும் முடியலையே! தேமுதிகவால் ஏமாந்துபோன பாஜக! எடப்பாடி செம ஹேப்பியாமே! அதிமுக மூவ்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக இடம்பெறுவது உறுதியாகி விட்டது. தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி மேற்கொண்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியமாக காய் நகர்த்தி சாதித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் தேமுதிக விஷயத்தில் பல முயற்சிகள் செய்தும் கூட இன்னும் பயிற்சி வேண்டுமோ? என்ற நிலைக்கு பாஜகவினர் தள்ளப்பட்டுள்ளனர்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. பாஜகவை அதிமுக தனது கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டுள்ளது. இதனால் பாஜக தனித்து கூட்டணி அமைத்து களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது.
அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் அப்படியே திமுக கூட்டணியில் உள்ளன. மாறாக அதிமுக, பாஜக கட்சிகள் தனித்து தேர்தலை சந்திப்பால் பிற கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைக்க இருதரப்பும் முயன்று வருகிறது.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக முயன்றன. இதற்கு முக்கிய காரணம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்தன. இதில் தொடக்கம் முதலே அதிமுகவின் கை தான் ஓங்கி இருந்தது. அதாவது பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதில் பாஜகவை விட அதிமுக தீவிரமாக செயல்பட்டது.
இதற்கிடையே இன்று அதிமுக-தேமுதிக சார்பில் 2வது கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக அலுவலகத்தில் அதிமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டவர்களும், தேமுதிக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதீஷ், அவைத் தலைவர் டாக்டர் வி இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் துணை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது அதிமுக கூட்டணியில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் என 4 தொகுதி, 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தேமுதிக கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் 4 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொகுதியில் சில மாற்றங்கள் செய்ய அதிமுக விரும்புகிறது. வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி தொகுதிகளை வழங்க அதிமுக விரும்புவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் கூறுகையில், ‛‛அதிமுகவுடன் நடந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. கூட்டணி அமைப்போம் என உறுதி செய்து வெற்றிக் கூட்டணியாக இது அமையும் என பரஸ்பரம் பேசிக்கொண்டோம். எத்தனை தொகுதிகள் என்ற கட்டத்திற்கு இன்னும் வரவில்லை. இன்று பேச்சுவார்த்தையில் பகிர்ந்து கொண்ட விஷயங்களை பிரேமலதா விஜயகாந்திடம் தெரிவிப்போம். மேற்கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும், அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்'' என்றார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்க உள்ளது.
இந்நிலையில் தான் தேமுதிக விஷயத்தில் பாஜக முற்றிலுமாக ஏமாந்துள்ளது. தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைப்பதில் பாஜக முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. தேமுதிக கட்சியை தொடங்கிய மறைந்த நடிகர் விஜயகாந்துக்கும், பிரதமர் மோடிக்கும் நெருக்கமான உறவு இருந்தது. விஜயகாந்த் ஆக்டிவ் அரசியலில் இருந்தபோது பாஜகவுடன் சேர்ந்து பயணித்தார். பிரதமர் மோடி தமிழகத்தில் விஜயகாந்தை மேடையில் வைத்து கட்டிபிடித்து அன்பை வெளிப்படுத்தியது யாராலும் மறக்க முடியாது. அதன்பிறகு இருகட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்தன. இந்த வேளையிலும் விஜயகாந்த் மீது பிரதமர் மோடி தனி பிரியம் வைத்திருந்தார்.
மேலும் சமீபத்தில் விஜயகாந்த் மறைந்த பிறகும் கூட பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அதோடு கடந்த ஜனவரியில் திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழாவின்போதும் விஜயகாந்தை குறிப்பிட்டு நண்பரை இழந்துவிட்டேன் என்று மேடையில் பேசினார். அதுமட்டுமி்றி அவர் தனது வலைதளத்தில் விஜயகாந்த் பற்றி நீண்ட பதிவு செய்திருந்தார்.
"மிகவும் போற்றப்பட்ட, மதிக்கப்பட்ட தலைவரான திரு விஜயகாந்த் அவர்களை சில நாட்களுக்கு முன்பு, நாம் இழந்தோம். அனைவருக்கும் கேப்டனாகத் திகழ்ந்த அவர், மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததுடன், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தலைமைப்பண்பைக் கொண்டிருந்தார். தனிப்பட்ட முறையில், மிகவும் அன்பான நண்பராக விளங்கிய அவருடன் நான் பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாகப் பழகியதுடன், அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன்'' எனறு தெரிவித்து இருந்தார்.
அதுமட்டுமின்றி 2024ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பத்ம விருதுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதில் மறைந்த நடிகர் விஜயகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் விஜயகாந்தின் குணத்துக்கு கிடைத்த மரியாதை என்றாலும் கூட பின்னணியில் அரசியல் காரணமும் உண்டு என அரசியல் நோக்கர்கள் கருதினர்.
அதாவது இத்தகைய செயல்கள் மூலம்பாஜக கூட்டணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக நிச்சயம் சேரும் என கருதப்பட்டது. அதோடு மறைந்த நடிகர் விஜயகாந்தின் அனுதாப ஓட்டுகள் தேமுதிகவுக்கு வரும் தேர்தலில் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தேமுதிகவின் வருகை என்பது பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்பட்டது. இதனால் தேமுதிகவை அதிமுக பக்கம் செல்ல விடாமல் தட்டித்தூக்க பாஜக முயன்றது. ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. மாறாக தேமுதிக பாஜகவுடன் செல்லாமல் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் தேமுதிக விஷயத்தில் மொத்தமாக பாஜக ஏமாற்றமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications