லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்.. சென்னையில் கூடும் 5 மாநில தேர்தல் அதிகாரிகள்.. ஆலோசனை
சென்னை: லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, உள்ளிட்ட மாநில தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இவிஎம் இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவைகளை சரி பார்க்கும்படி தேர்தல் அதிகாரிகளை அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இவிஎம் இயந்திரங்கள் பரிசோதனையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தலில் பணியாற்ற உள்ள அரசு அதிகாரிகளுக்கும் பயிற்சி முகாமும் நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான முகாம்கள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் வரை இந்த முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் மண்டல வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் லோக்சபா தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை, வக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தற்போதைய தயார் நிலை குறித்த ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்தல் தேதியை முடிவு செய்யும் முன் பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசு விடுமுறை, மாவட்ட உள்ளூர் விடுமுறைகள், பண்டிகை, விழாக்கள், பள்ளி, கல்லூரி தேர்வுகள், போட்டித்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் கேட்கப்படும். நாங்கள் அந்த விவரங்களை அளித்ததும், அவற்றை கணக்கிட்டு தேர்தல் தேதியை ஆணையம் முடிவு செய்யும்.
இன்று நடைபெறும் மண்டல கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதுதவிர, மாநிலங்களில் தேர்தல் பணிக்கென பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு காவல் அதிகாரிகள், மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications