ராஜேந்திர பாலாஜியை எப்படி வேண்டுமானாலும் தேடுங்கள்,ஆனால் உறவினர்களை தொந்தரவு செய்யக்கூடாது- ஐகோர்ட்
சென்னை: தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாகச் சிலர் அளித்த புகாரின் அடிப்பையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடி வரை மோசடி புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 புகார்கள் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன் ஜாமீன்
மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், இந்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உறவினர்கள் கைது
ஏற்கனவே, குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் கூடுதலாக 3 தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமி இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதிரடி உத்தரவுநீதிமன்றம்
இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்றாலும் கூட அந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சட்டத்திற்கு முரணாக ரமணா, வசந்தகுமார், ராஜ்குமார் ஆகியோரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாகவும் அவர்கள் மூன்று பேரையும் உடனடியாக விடுவிக்கும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக நீதிபதி சுவாமிநாதன் கூறுகையில், "வழக்கு விசாரணையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எப்படி வேண்டுமானாலும் தேடுங்கள், விசாரணை செய்யுங்கள். ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றனர்.

சொந்தரவு செய்யக்கூடாது
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களைச் சட்டத்துக்குப் புறம்பான வகையில் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் முறையாக நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி வலியுறுத்தினார். இந்த வழக்கு விசாரணையைத் திங்கட்கிழமை ஒத்திவைத்து நீதிபதி, அன்றைய தினம் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் கணேஷ் தாஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். குடும்ப உறுப்பினர்கள் யார் மீதும் பொய் வழக்குப் போடுவதையும் குற்றவாளி அல்லாதவர்களை இது போன்று தொந்தரவு செய்வதையும் போலீசார் நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் நீதிபதி தெரிவித்தார்.

மேல்முறையீடு மனு
இதற்கிடையே தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அதற்குள் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்யவும் தமிழ்நாடு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications