‘மாமன்னா.. மாமா மன்னா..’ - வடிவேலு ஸ்டைலில் விளக்கமளித்த மகா விஷ்ணு ஆதரவாளர்
சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மகா விஷ்ணு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மகா விஷ்ணுவின் ஆதரவாளர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர்கள் சினிமா உதாரணங்களுடன் பதில் அளித்தனர்.
சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் மேடை பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் கலந்து கொண்டார். அப்போது அவர் "மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளுக்கு முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் காரணம்." என்று பேசியது சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காவல்துறையில் புகாரும் அளித்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த மகா விஷ்ணுவை காவல்துறை கைது செய்தது.
இதுகுறித்து மகா விஷ்ணுவின் ஆதரவாளர் குகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழில் ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் கூட, 'அடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும். மாமன்னா நீ ஒரு மாமா மன்னா.' என்று வடிவேலு காமெடி வரும். மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மகா விஷ்ணுவுக்கு இல்லை. ஒருவேளை யாராவது காயப்பட்டிருந்தால், அண்ணன் சார்பாக நாங்கள் மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறோம். நான் விருகம்பாக்கத்தை சேர்ந்தவன்.
அண்ணனின் பாலோயராக இருந்து, அண்ணனின் டிரைவராக வந்துள்ளேன். அவரின் யூடியூப் சேனலைப் பார்த்து, எங்களைப் போல முன்னேறியவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. அண்ணனை பேச விட்டிருந்தால் அவரே அதை விளக்கியிருப்பார். ஆனால் அவரை பேச விடவில்லை. அதற்குள் இதை சர்ச்சையாக்கிவிட்டனர். சந்திரமுகி படம் பார்த்தீர்களா. சந்திரமுகியாக வந்தார். நின்றார். சந்திரமுகியாகவே மாறிவிட்டார் என்பது போலதான் இதுவும். " என்று அவர் எதையோ சொல்ல வந்தார்.
அப்போது, "சினிமா படங்களையே உதாரணமாக சொல்கிறீர்கள். நீங்கள் டிராமா ஆர்டிஸ்டா.. நாங்கள் கோட் படம் வரை பார்த்துவிட்டோம். நீங்கள் உரிய விளக்கத்தை சொல்லுங்கள்." என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குகன், "கோட் எல்லாம் விடுங்க. அண்ணன் தவறாக எதுவும் பேசவில்லை. ஒருவர் சொல்வதை மேற்கொள் காட்டி சொல்லுவதற்கு அவர் மீது வழக்குப்பதிய முடியாது. இது அவரின் சொந்த கருத்து இல்லை.
நீங்கள் திருவள்ளுவரை குறை சொல்வீர்களா. எல்லாவற்றுக்கும் இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறோம். அவருக்கு துபாய், சிங்கப்பூரில் வகுப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் ரத்து செய்து இங்கு வந்துள்ளார். இங்கு வந்தால் கைது செய்வார்கள் என்பதும் அவருக்கு தெரியும். இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை. இந்த இரண்டு நாள்கள் சட்டப்படி நீதி வாங்க முடியாது என்று நன்கு தெரியும்.
இருப்பினும், 'நான் இந்திய இறையாண்மையை, சட்டத்தை மதிக்கிறேன்.' என்று சொல்லி, அனைத்து வேலைகளையும் ரத்து செய்து வந்து கைதாகியுள்ளார். அவரை எங்கு அழைத்து சென்றனர். மகாவிஷ்ணுவுக்கு. எங்கள் குருஜிக்கு ஏதாவது என்றால் யார் பொறுப்பு. ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களுக்கு ஏதாவது டீ, காபி ஏதாவது ஆர்டர் செய்யவா." என்று கேட்டார். "எங்க மைக்கை மட்டும் கொடுங்க எதுவும் வேண்டாம்." என்று சொல்லிவிட்டு செய்தியாளர்கள் கிளம்பினார்கள்.












Click it and Unblock the Notifications