இது எப்படி நடக்கும்.. ரிசல்ட்டை பார்த்ததும் அதிர்ச்சி.. தமிழக குரூப் 4 தேர்வில் முறைகேடா?
சென்னை: குரூப் 4 தேர்வு தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வில், முறைகேடு நடந்திருப்பதாக தேர்வானவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது. 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர், இந்தத் தேர்வை எழுதினார்கள்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு நடைபெற்று மிகக் குறைந்த நாள்களில் அதாவது 72 நாள்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை பார்த்ததும், அங்குதான் முதலில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் இடம் பெற்று இருந்தனர். இதை கவனித்த பிறருக்கு இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் தரவரிசையில் மாநில அளவில் 40 பேர் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியுள்ளனராம்.
அனைத்து முன்னிலை இடங்களையும், குறிப்பிட்ட இரண்டு மையங்களில் இருந்தே தேர்ச்சி பெற்றிருப்பதால், இந்த தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? விடைத்தாள்களில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா? என்ற வினாக்கள் எழுந்துள்ளன.
கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனராம்.
ராமநாதபுரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பது பிற தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு, கேட்டபோது,
ஆவணங்களை சரிபார்த்த பின்பு தான் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications