கோயம்பேடு மேம்பாலத்தில் அதிர்ந்த வாகன ஓட்டிகள்.. ஹெல்மெட்டால் ஒரே அடி! சுருண்டு விழுந்த இளம்பெண்
சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண் ஒருவரை அவரது ஆண் நண்பர் ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அந்த பெண் அப்படியே சுருண்டு விழுந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நடுரோடு என்றும் பாராமால் அந்த பெண்ணை ஆண் நண்பர் தாக்கியுள்ளார். இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் யார் என்பதை அவரது இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும். பஸ்கள், பைக்குகள், கார்கள் என எந்நேரமும் வாகன இரைச்சலோடு பிசியாக, பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இந்த கோயம்பேடு மேம்பாலத்தில் நேற்று மதிய நேரத்தில் ஆண் - பெண் இருவர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டு இருந்துள்ளனர். இதில் திடீரென அந்த மேம்பாலத்தில் இருச்சக்கர வாகனத்தை நிறுத்திய ஆண் நண்பர், நடு ரோடு என்றும் பாராமல் இளம்பெண்ணை சரமாரியாக தாக்க தொடங்கினார். முகத்தில் கைகளால் தாக்கியதோடு, தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை எடுத்து இளம்பெண்னை தாக்கியுள்ளார்.
இதில் அந்த பெண் அடி தாங்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்தார். இதன் பிறகு சாலையில் மயக்கமடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்த ஆண் நண்பர் மற்றவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால் ஏதும் பிரச்சினை வந்துவிடுமோ என்று பயந்து அந்த பெண்ணை அந்த இளைஞரே இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையே நடு ரோட்டில் இருவரும் சண்டையிட்டு கொண்டிருக்க மற்ற வாகன ஓட்டிகள் கண்டும் காணாதபடி சென்றுள்ளனர்.
வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் தான் நடுரோட்டில் ஆண் பெண் சண்டையிடுவதை பார்த்து இதனை வீடியோவாக எடுத்ததோடு, அதனை ஆன்லைன் வழியாக சென்னை காவல்துறைக்கு புகாராகவும் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் எடுத்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், பெண்ணை ஆண் நண்பர் கை மற்றும் ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்குகிறார்.
அந்த பெண் வலி தாங்க முடியாமல் அலறுகிறார். அடுத்த நொடியே இளம்பெண் மயக்கமடைந்து சாலையில் கீழே விழுகிறார். இதனால் பதறிப்போன, அந்த நபர்.. அருகில் நின்றவரை பார்த்து.. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்க என உதவி கேட்கிறார். தொடர்ந்து அருகில் நின்றவர் போலீஸ் இப்போ வருவாங்க என்று சொல்லவே, தாக்கிய இளம் பெண்ணையே தனது பைக்கில் அமரவைத்து அந்த இளைஞர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் தான் போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீடியோவில் இளைஞரின் இரு சக்கர வாகனத்தில் பதிவு எண்ணை வைத்து அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் இளம்பெண்ணை இளைஞர் தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications