ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் அவமானத்திற்குரியது... பேராசிரியர் ஜவாஹிருல்லா விமர்சனம்
சென்னை: ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் நிகழ்ந்த குளறுபடிகளும், ஊழலும் அவமானத்திற்குரிய செயல் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய உதவும் அதிவிரைவு பரிசோதனை சாதனம் (Rapid Testing Kit) வாங்கியதில் சுமார் 18.75 கோடி அளவு ஊழல் நடந்திருப்பதும் இந்த ஊழலில் மத்தியில் ஆளும் பாஜக அரசும் அதற்கு ஆதரவு அளிக்கும் தமிழக அதிமுக அரசும் ஈடுபட்டிருப்பதும் பெரும் அவமானத்திற்குரிய செயலாகும்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவலில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதி விரைவு கருவியின் விலை ரூ.245 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.245க்கு கொள்முதல் செய்ய வேண்டிய இந்த கருவியை மத்திய அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமமும் தமிழக அரசும் ரூ.600க்கு கொள்முதல் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அதி விரைவு கருவி தொடர்பாகத் தீர்ப்பளித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம் நீதியரசர் வஜிரி இக்கருவியை ஜி.எஸ்.டி உட்பட ரூ.400க்கு மிகாமல் விற்பனை செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஒரு நேர்மையான நீதிபதி முன்பு இவ்விவகாரம் விசாரணைக்கு வந்ததினால் விசாரணை ஒத்திவைப்பு இல்லாமல் மிக பெரும் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனா முழு முடக்கத்தின் காரணமாகச் சாதாரண சாமானியனிலிருந்து அனைவரும் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு தனியார் நிறுவனம் 5 இலட்சம் பரிசோதனை சாதனங்களை ரூ.12.25 கோடிக்கு வாங்கி அதனை ரூ 30 கோடிக்கு விற்பனை செய்து 145% கொள்ளை லாபம்; அடைந்துள்ளது.
இந்த நிறுவனம் கேட்ட விலைக்கு ஐசிஎம்ஆரும் தமிழக அரசும் இந்த கருவியை வாங்கியிருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவ்வளவு அதிக லாபம் கொடுத்து வாங்கிய கருவியும் பயனற்ற கருவியாக அமைந்து விட்டது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications