மார்டன் ஆன மால் இது.. ஆனால் கழிவறை தண்ணீரை எடுக்க வசதி இல்லை.. ஒரு உயிர் அநியாயமா போச்சே!
கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்தபோது இளைஞர் பலியாகி உள்ளார்
Recommended Video
சென்னை: எக்ஸ்பிரஸ் அவென்யூ மால்.. சென்னையின் அதி நவீனமான, மார்டர்ன் ஆன மால் இது.. இங்கு இல்லாத வசதியே இல்லை.. அத்தனை வசதிகளும் கொண்ட இந்த மாலில் ஒரு அநியாய மரணம் நடந்துள்ளது. கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்ய இங்கு மெஷினைப் பயன்படுத்தாமல், ஆளைப் பயன்படுத்தி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
என்னதான் விஞ்ஞானம், தொழில்நுட்பம், வசதிகள், அதி நவீனம் என்று பேசினாலும் செயல்பட்டாலும் அன்றாடத் துயரங்களுக்கும், அவலங்களுக்கும் இன்று வரை விடிவே இல்லாமல் தொடர் கதையாகி நீள்வது பெரும் ஆச்சரியமாகவே இருக்கிறது. அதில் ஒன்றுதான் மனிதனே மனித மலத்தை அள்ளும் அவலம்.
இன்று வரை கழிப்பறை கழிவுகள், சாக்கடை அடைப்புகளை சரி செய்ய மனிதர்களையே அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு விடிவே இல்லை.. இதில் பல உயிர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டே இருக்கின்றன. பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனாலும் இது தொடர் கதையாகவே உள்ளது.

மூச்சு திணறல்
சென்னையின் அதி நவீன மால் என்று அறியப்படும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விஷ வாயு தாக்கி அவர் மூச்சுத் திணறி பலியாகியுள்ளார். தலைநகரின் அதி நவீன மாலிலேயே இப்படியா என்று அனைவரும் விதிர்த்துப் போய் நிற்கின்றனர். வெறும் 600 ரூபாய் சம்பளத்திற்கு அவரைக் கூட்டி வந்துள்ளார் அந்த செப்டிங் டேங்க் சுத்தம் செய்யும் காண்டிராக்டர். முறையான பாதுகாப்பு கவசம், வசதி இல்லாமல் சுத்தம் செய்யும் பணியில் அவரை ஈடுபடுத்தியுள்ளனர்.

செப்டிக் டேங்க்
இந்த சம்பவத்தில் இறந்தவரின் பெயர் அருண்குமார். திங்கள்கிழமை இரவு பத்தரை மணி இருக்கும். சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள தனது வீட்டிலிருந்து தனது தம்பி ரஞ்சித் குமாருடனும், மேலும் 3 பேருடனும் (யுவராஜ், அஜீத் குமார், ஸ்ரீநாத்) மாலுக்குச் கிளம்பிச் சென்றார் அருண் குமார். தண்டபாணி என்ற செப்டிக் டேங்க் காண்டிராக்டரிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று இவர்கள் சென்றார்கள்.

மாஸ்க், கிளவுஸ்
எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் 3வது தளத்தில் உள்ள ஒரு செப்டிக் டேங்க், 2 தண்ணீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்காக இவர்கள் சென்றனர். முதலில் தண்ணீர்த் தொட்டிகளை சுத்தம் செய்துள்ளனர். பின்னர் செப்டிக் டேங்க் பக்கம் வந்துள்ளனர். காண்டிராக்டர் இவர்களிடம் மாஸ்க், கைக் கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொடுத்து அணிய வைத்துள்ளார். பின்னர் போட்டோ எடுத்துள்ளார். அதன் பிறகு அனைவரிடமும் அதைக் கழற்றி வாங்கிவிட்டார்.

போட்டோ
எதற்காக இப்படி என்றால், பாதுகாப்புக்காக போட்டோ எடுப்பதற்காக இவ்வாறு அணிய வைத்துள்ளார். ஆனால் இதைப் பயன்படுத்தி விட்டால் மறுபடியும் பயன்படுத்த முடியாது என்பதால் போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு கழற்றி வாங்கி விட்டதாக ரஞ்சித் குமார் கூறியுள்ளார். என்ன கொடுமைக்கார மனிதர் பாருங்க இந்த காண்டிராக்டர்.

அஜித்குமார்
அதைப் பொருட்படுத்தாமல் தங்களது வேலையை ஆரம்பித்துள்ளனர் இவர்கள். முதலில் ரஞ்சித்தான் உள்ளே இறங்கியுள்ளார். கொஞ்ச நேரத்தில் அவருக்கு மயக்கம் வந்துள்ளது. இதைப் பார்த்த அருண் குமார் தம்பி தம்பி என்று அலறியபடி உள்ளே குதித்துள்ளார். உள்ளே குதித்த வேகத்தில் அவர் தனது தம்பியை மேலே தூக்கியுள்ளார். மேலே இருந்த அஜீத் குமார் ரஞ்சித்தை பத்திரமாக மீட்டு தூக்கினார். ஆனால் அருண் குமார் மயங்கி உள்ளேயே விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்து போனார்.

மயக்கம்
அவரை மீட்க அஜீத் குமாரும் உள்ளே போயுள்ளார். ஆனால் விஷ வாயு நெடி தாங்க முடியாமல் அவருக்கும் மயக்கமாகவே அவர் மேலே வந்து விட்டார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் காண்டிராக்டர் தண்டபாணி அங்கிருந்து போய் விட்டார். கடந்த ஐந்து வருடமாகவே இந்தப் பணிகளில் குமார் சகோதரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்தான் குடும்பத்துக்கு நிதியாதாரம். இவர்களது தாயார் அரசு மருத்துவமனையில் துப்புறவுப் பணியாளராக இருந்து வந்தார். இவர்களது தந்தை உடல் நலம் சரியில்லாமல் வீட்டோடு இருக்கிறார்.

பரிதாப மரணம்
அருண் குமார் படிப்பு 10 வரைதான். ரஞ்சித்தின் படிப்பு 6ம் வகுப்போடு நின்று போச்சு. காரணம், குடும்ப வறுமை அப்படி. பகலில் எலக்ட்ரீஷியனாகவும், இரவில் ஸ்பேர் பார்ட்ஸ் கடையிலும் வேலை பார்த்து வருகிறார் ரஞ்சித் குமார். காரணம், செப்டிக் டேங்க் வேலை ரெகுலராக கிடைக்காதாம். கிடைக்கும்போது போவார்களாம். இப்போது பரிதாபமாக அருண் குமாரின் உயிர் பறி போயுள்ளது.

காதல் திருமணம்
தற்போது தண்டபாணி மீது அண்ணா சாலை போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அருண் குமார் காதல் திருமணம் செய்தவராம். அவருக்கும், மனைவி சுகன்யாவுக்கும் 4 வருடங்களாக காதல் இருந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு பிறந்து 7 மாதமேயான தீக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளது. தற்போது அருண்குமாரை இழந்து சுகன்யா பெரும் வேதனையில் மூழ்கியுள்ளார்.
என்ன செய்யப் போகிறோம்?












Click it and Unblock the Notifications