விஜய் தவெக மாநாட்டில் அடுத்தடுத்து தொண்டர்கள் மயக்கம்.. குடி தண்ணீர் இல்லை! என்ன நடக்கிறது? பரபரப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெறும் நிலையில், காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். இதற்கிடையே வெயில் காரணமாகக் குடிநீரின்றி தவெக கட்சியினர் சிலர் மயக்கமடைந்துள்ளனர். அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அக்கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வி சாலையில் நடைபெறுகிறது.

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு இன்று மாலை தான் நடைபெறுகிறது. விஜய் இன்று மாலை தான் அதில் பேசப்போகிறார். அதில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இணையலாம் என்று கூறப்படுகிறது.
மாநாடு: மாலை தான் மாநாடு என்ற போதிலும், நேற்றிரவு முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இன்று காலையே மாநாடு நடக்கும் இடம் சுமார் 60% மேல் நிரம்பி விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பார்கிங் நிரம்பிவிட்ட நிலையில், கூடுதல் பார்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அதிகளவில் வந்துள்ள நிலையில், அங்குள்ள பவுன்சர்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் குடிநீர் இல்லாமல் தொண்டர்கள் அவதி எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மயக்கம்: குடிநீர் கிடைக்காமல் சில தொண்டர்கள் மயக்கமடைந்தும் உள்ளனர். மயக்கமடைந்த தொண்டர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அங்கு அவருக்கு சிபிஆர் சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துக் காப்பாற்றினர். பொதுவாக இதய பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே சிபிஆர் சிகிச்சை தரப்படும். மாநாட்டுத் திடலில் இரண்டு புறங்களிலும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொண்டர்கள் அமைதி காக்கும்படியும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி வருகிறார்.
கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்குள்ள ஹோட்டல்கள் பல ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. இப்படி, தண்ணீரும் உணவும் கிடைக்காமல் தவெக தொண்டர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். அங்கு மாநாடு நடைபெறும் இடத்தில் இரண்டு பக்கமும் பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பார்கிங் ஏற்கனவே முழுமயைடந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், பார்கிங் நடக்கும் இடத்தில் இருந்து மாநாடு நடக்கும் இடத்திற்கு சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள நிலையில், இதனால் பார்கிங்கில் வாகனங்களை நிறுத்துவிட்டு மக்கள் சாலைகளில் சாரை சாரையாக நடந்து வருகிறார்கள்.
என்ன பிரச்சினை: இன்று அப்பகுதியில் வெயில் அதிகமாக இருக்கும் நிலையில், சாலைகளில் நடந்து வரப் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். அப்படி தான் சாலையில் நடந்து வந்த மற்றொரு தொண்டரும் மயங்கி விழுந்தார். அவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. அங்கு அருகே ஆம்புலன்ஸ் அல்லது மருத்துவக் குழு எதுவும் இல்லாத நிலையில், போலீசாரே அவரை மீட்டு சிகிச்சை தந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்புலன்ஸ்கள்: மாநாட்டு திடல் நடக்கும் இடத்திற்குள்ளே 20+ ஆம்புலன்ஸ் மற்றும் தேவையான மருத்துவ குழு உள்ளன.. இருப்பினும், பார்கிங் செய்யப்படும் இடத்தில் இருந்து மாநாடு நடக்கும் இடத்திற்குச் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் அல்லது மருத்துவ குழு இல்லை. இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.
மேலும், மாநாடு நடக்கும் இடத்தை நோக்கி இன்னுமே மக்கள் வந்து கொண்டு இருப்பதால் அங்கு வாகன நெரிசல் மோசமாக உள்ளது. சுமார் 5 கிமீ வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகன நெரிசல் இருப்பதால் ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. போக்குவரத்து பாதிப்பைச் சீர் செய்ய நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications