துரைசாமிக்கு உள்நோக்கம்.. திமுகவுடன் மதிமுக ஒருபோதும் இணைப்பு இல்லை.. முற்றுப்புள்ளி வைத்த வைகோ
சென்னை: திமுகவுடன் மதிமுகவை இணைத்து விடலாம் என்று கூறிய துரைசாமிக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்றும் கட்சியினர் வற்புறுத்தியதால்தான் எனது மகன் அரசியலுக்கு வந்ததாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு பொறுப்பு கொடுத்தது அக்கட்சியில் சில சலசலப்பை ஏற்படுத்தியது. வாரிசு அரசியலை எதிர்த்து உருவாகிய மதிமுகவிலேயே வாரிசா? என்பது மூத்த நிர்வாகிகளின் ஆதங்கமாக இருக்கிறது.

எப்போது வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே மதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதிமுகவின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிற்கு எழுதிய ஒரு கடிதம் மதிமுக வட்டாரத்தில் மட்டும் இன்று தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.
வைகோவின் செயல்பாடுகளை விமர்சித்தும் மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்றும் வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மதிமுக தலைமை கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து இருந்தது. இந்த நிலையில், சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இவ்விவகாரம் குறித்து தனது பேட்டியில் கூறியதாவது:-
இரண்டு வருடமாக வராதவர் இப்போது அறிக்கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல நோக்கத்திலா இருக்க முடியும். அவருக்கு வேண்டும் என்றால் அப்படி ஒரு எண்ணம் இருக்கலாம். கட்சியில் இருக்கும் 99 சதவிகிதம் பேருக்கு இல்லை. இதுதான் தமிழ்நாடு முழுவதும் மதிமுக தொண்டர்களின் உணர்வு. 30 வருடம் நாங்கள் போராடி பயணித்து வந்துவிட்டோம்.

எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறோம்.. இதையும் கடந்து செல்வோம். துரைசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த வைகோ, நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். சிலவற்றை நிராகரிக்கிறோம். ஜனநாயகப்படி கட்சி நடைபெற்று வருகிறது. கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
விரும்புகிறவர்கள் பொறுப்புக்கு வருகிறார்கள். இதற்கு மேல் நான் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச விரும்பவில்லை. மதிமுகவினர் வற்புறுத்தியதால்தான் என் மகன் துரை அரசியலுக்கு வந்தார். இவ்வாறு வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications