டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று சொன்ன எம்ஜிஆர் மக்கள் கட்சி - கமலின் மநீமவிற்கு கிடைக்க வாய்ப்பு
டார்ச் லைட் தங்களுக்கு வேண்டாம் என்று அந்த சின்னத்தை பெற்றிருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
சென்னை: டார்ச் லைட் சின்னம் தங்களுக்கு வேண்டாம் என்றும் எம்ஜிஆரை நினைவுப்படுத்தும் சின்னங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரியும் எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. டார்ச் லைட் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது ஏற்புடையது அல்ல என்று அந்த கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. அதிமுக இரட்டை இலை சின்னத்திலும் திமுக உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன.
பிற கட்சியினர் தங்களுக்கான சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தன. அமமுகவிற்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னம் கேட்டு விண்ணப்பித்தது. கமல்ஹாசனும் கையில் டார்ச் லைட்டுடன் பிரச்சாரத்தை தொடங்கினார்.
சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய கமல்ஹாசன் மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் பேசினார். கடந்த 14ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக சட்டசபைத் தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு இல்லை என்று தெரிவித்தது.
டார்ச் லைட் சின்னத்தை விஸ்வநாதன் என்பவர் நடத்தி வரும் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம் ஆனால், புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் ஒதுக்காததற்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். டார்ச்லைட் சின்னம் இல்லை என்றால் கலங்கரை விளக்கத்தை நாங்கள் வாங்குவோம். சாதாரண ரூபத்தை விஸ்வரூபமாக மாற்றுவது இவர்கள்தான். நீங்கள் சொல்லுங்கள், எப்பொழுது விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று. உடனடியாக எடுத்து விடுவோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. தங்கள் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தையே 2021 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரிக்கு ஒதுக்கியதுபோல், தமிழகத்துக்கும் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது.
தற்போது புதிய திருப்பமாக தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்துள்ளார் எம்ஜிஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன். தேர்தல் ஆணையத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கிய சின்னம் தங்களுக்கு வேண்டாம் என்றும் எம்ஜிஆரை நினைவு படுத்தும் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அதை வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்க வாய்ப்புள்ளது. கமல்ஹாசனே நேரில் வந்து கேட்டாலும் டார்ச் லைட் சின்னத்தை விட்டுத் தர மாட்டேன் என்று சொன்ன எம்ஜிஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் இப்போது திடீரென சின்னம் வேண்டாம் என்று கூறியுள்ளார். டார்ச் லைட் சின்னத்தை விஸ்வநாதன் விட்டுக்கொடுத்திருப்பதால் கமல் இனி தைரியமாக டார்ச் லைட் அடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.