வட மாநில தொழிலாளர்கள் வதந்திகளை நம்பாதீர்கள்..இந்தியாவில் எங்கும் வேலை செய்யலாம்..சிராக் பஸ்வான்
வட மாநில தொழிலாளர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.
சென்னை: இந்தியாவில் யாரும் எங்கும் பணிபுரியலாம் என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும் பீகாருக்கும் இடையே நல்ல நட்புறவு நீடிப்பதாக கூறிய அவர், வட மாநில தொழிலாளர்கள் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் போலியான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

எனவே இது தொடர்பாக உண்மை நிலையை கண்டறியும் வகையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 உயர் அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர். இவர்கள் தமிழக அதிகாரிகளிடம் நடந்த விசயங்களை கேட்டறிந்தனர். இந்த குழுவினர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் அங்குள்ள வட மாநில தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார்கள். இந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ள பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.
வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு தொலைபேசி எண்களை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. வட மாநில மொழிலாளர்களை சந்தித்து பேசி விழிப்புணர்வும், நம்பிக்கையும் ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பஸ்வான், பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது அவர் வட மாநில தொழிலாளர்கள் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பீகாருக்கும், தமிழகத்திற்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது என்று கூறிய சிராக் பாஸ்வான், இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற உரிமை உள்ளது என்றார். சமூக வலைத்தளங்களில் போலியான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்றும் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கிண்டி ராஜ்பவன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான மனுவையும் ஆளுநரிடம் அளித்தார்.












Click it and Unblock the Notifications