ஊரடங்கு அச்சம்...வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் - நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள்
ஊரடங்கு அச்சம் காரணமாக தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூரில் பல ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.
சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் வெளிமாநில தொழிலாளர்களிடையே எழுந்துள்ளது. கடந்த ஆண்டைப்போல பேருந்து ரயில்களுக்கு சிரமப்பட வேண்டியிருக்கும் என்று நினைத்து தமிழகத்தை விட்டு வெளியேறும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் உத்தரகாண்ட், அசாம் போன்ற மாநிலங்களில் இருந்துதான் பெருவாரியான தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து வேலை செய்கின்றனர்.
உண்ண உணவு, சரியான சம்பளம் தங்குவதற்கு இடம் கொடுத்தால்போதும் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள். நல்ல உழைப்பாளிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை முடிந்துவிடும் என்பதால் வட மாநிலத் தொழிலாளர்களை தமிழக தொழில் அதிபர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

புலம் பெயர் தொழிலாளர்கள்
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூரில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கு அமலுக்கு வந்த போது இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பலர் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடினார்கள்.

சொந்த ஊர் பயணம்
டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கால் நடையாகவே மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு பயணப்பட்டனர் புலம்பெயர் தொழிலாளர்கள். மீண்டும் அதே போல ஒரு நிலைமை வந்து விடுமோ என்ற அச்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கால் நடையாகவே மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு பயணப்பட்டனர் புலம்பெயர் தொழிலாளர்கள். மீண்டும் அதே போல ஒரு நிலைமை வந்து விடுமோ என்ற அச்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு
கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கும் அமலாகிறது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் காத்திருப்பு
வேலை செய்யும் இடங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக படையெடுத்து சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. அடுத்த ரயிலுக்காக காத்திருப்பவர்களால் சென்னை ரயில் நிலையம் நிரம்பி வழிகிறது.

கோவை ரயில் நிலையம்
இதேபோல், கோவை மாவட்டத்திலும் தொழிற்சாலைகள், உணவகங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். கோவையில் இருந்து பீகார் மாநிலம் தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

வேலை பறிபோகும் அச்சம்
திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் காத்திருக்கின்றனர். இரவு நேரத்தில் செல்லக்கூடிய ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் காலை முதலே ரயில் நிலையங்களில் காத்திருக்கின்றனர். புதிய கட்டுப்பாடுகள் காரணமாக வேலை வாய்ப்பு பறிபோகும் அச்சத்தால் சொந்த ஊர் செல்வதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications