உண்மை தெரியாமல் பேசக்கூடாது! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்!
சென்னை: மீனவர்கள் விவகாரத்தில் உண்மை நிலை அறியாமல் உள்நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், மீனவர்களின் பாதுகாப்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக விளக்கம் அளித்துள்ள அவர் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து யாரும் தப்பியதாக வரலாறு இல்லை! இனிதான் கச்சேரி இருக்கு -ஆர்.எஸ்.பாரதி
வானிலை மையம்
01.08.2022 அன்று காலை 05:30 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வானிலை எச்சரிக்கையில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் குமரி கடல், மன்னார் வளைகுடா, தெற்கு தமிழ்நாடு கடற்கரையோரங்கள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் சுழல் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்காணும் பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தகவல் பெறப்பட்டது.
மீன்பிடி தொழில்
இவ்வானிலை எச்சரிக்கை தகவல் உடனடியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள அனைத்து கடலோர கிராமங்கள் மற்றும் மீனவ சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டு, 01.08.2022 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.
1825 நாட்டுப்படகுகள்
இந்த வானிலை எச்சரிக்கை பெறுவதற்கு முன்பே 01.08.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 1905 நாட்டுப் படகுகள் மற்றும் 120 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன இவற்றில் 1825 நாட்டுப்படகுகள் கரை திரும்பின. மீதமுள்ள படகுகள் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர் மீனவ கிராமத்திலிருந்து நாட்டுப்படகில் 4 மீனவர்களுடன் 01.08.2022 அதிகாலை 02 மணி அளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி விபத்துக்குள்ளானது.
கடலில் தத்தளித்த இருவர்
அப்போது அவ்வழியே வந்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்த இருவரை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். இவ்விவரம் 01.08.2022 மாலை தெரிய வந்ததை அடுத்து காணாமல் போன 2 மீனவர்களை மீட்பதற்கு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டு கடலோர காவல்படை மூலமும் உள்ளூர் மீனவர்களை கொண்டும் உடனடியாக காணாமல் போன மீனவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடலோர காவல்படை
02.08.2022 அன்று கடலோர காவல்படையின் 2 ரோந்துக் கப்பல் (ICG அவிராஜ், ICG ஆதேஸ்), 1 ட்ரோனியர் விமானம் மற்றும் இந்திய விமானப்படையின் 1 ஹெலிகாப்டர் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்கள் காணாமல் போன விபரம் அறிந்தவுடன் நான் நேற்று (02.08.2022) அமலிபுரம் சென்று மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து துரிதப்படுத்தினேன். மேலும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தேன். இன்றைய நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து எந்த விசைப்படகும் மீன்பிடிப்பில் இல்லை.
எடப்பாடி பழனிசாமி
முதல்வரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீனவர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கரையுடன் செயல்பட்டு வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உண்மை நிலை அறியாமல் உள்நோக்கத்துடன் ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.