அடுத்த ஆட்டம் விரைவில்.. மழைநீர் தேங்கவே கூடாது.. தூர்வாரும் பணிகளை உடனே முடிக்க துரைமுருகன் ஆர்டர்!
சென்னை: வடகிழக்குப் பருவமழை நெருங்கும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து கால்வாய்களையும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தூர்வாரி, ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் ஆர்டர் போட்டுள்ளார்.
நீர்வளத்துறையின் சென்னை மண்டலப் பணிகள் குறித்து அனைத்து நீர்வளத் துறை அதிகாரிகளுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, கூடுதல் செயலர் எஸ்.மலர்விழி, நீர்வளத்துறை சிறப்பு செயலர் கா.முருகன் மற்றும் சென்னை மண்டல உயரதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவமழை முன்னேற்பாடுகளுக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி, ஆகாயத்தாமரைகளை அகற்றி தங்கு தடையின்றி நீர் செல்ல வழிகளை ஏற்படுத்த வேண்டும்.
நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளும் தூர்வாரும் பணிகள் மற்றும் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகள், நீர்வள, நிலவள திட்டப் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.
மேலும், கடந்தாண்டு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.434 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் போரூர் ஏரி உபரிநீர் கால்வாய், அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி, கொசஸ்தலை ஆற்றின் வெள்ளக்கரை அமைக்கும் பணி, சென்னை மாநகர முக்கிய ஏரிகளில் நீர் ஒழுங்கிகள் அமைக்கும் பணிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, செம்மஞ்சேரி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தார் அமைச்சர் துரைமுருகன்.
தொடர்ந்து, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் மேம்படுத்தும் பணி, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மாதவரம் ரெட்டேரியில் நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் அமைச்சர் துரைமுருகன்.
முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே, நிலுவையில் உள்ள அனைத்து சாலை மற்றும் பாலப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications