"அதெல்லாம் எனக்கு தெரியாது”.. அமலாக்கத்துறை ரெய்டு குறித்து பட்டென சொன்ன அமைச்சர் துரைமுருகன்!
சென்னை: அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்து எனக்குத் தெரியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கனிமவளத்துறை அலுவலகத்திலும் ஈ.டி ரெய்டு நடந்த நிலையில் அத்துறையின் அமைச்சரான துரைமுருகன் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளிலும் அவற்றுடன் தொடர்புள்ள இடங்களிலும் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. இந்த ரெய்டு இரவு வரை நீடித்தது. இரண்டாவது நாளாக இன்றும் பல இடங்களில் ரெய்டு தொடர்கிறது.

கணக்கில் வராமல் பெருமளவில் மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக ஆஃப்லைனிலும் விற்பனை நடப்பதாகவும், மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தொடர் புகார்களை அடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் சோதனையைத் தொடங்கினர்.
மணல் குவாரிகளிலும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் உட்பட பலரது வீடுகளில் இன்றும் இரண்டாவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது. அதேபோல, கரூர், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரி ஒப்பந்ததார்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்களின் வீடுகள், மணல் குவாரிகளில் ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், கனிமவளத்துறை அலுவலகத்திலும் ED அதிகாரிகள் விசாரணையில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கனிமவளத்துறை அதிகாரிகளிடமும், அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறையினரின் இந்தச் சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வரி ஏய்ப்பு தொடர்பான விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கனிமவளத்துறை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அமலாக்கத்துறை ரெய்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் துரைமுருகன், அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்து எனக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications