இனி தமிழகத்தில் எங்கு வேணாலும் ரேஷன் வாங்கும் திட்டம்.. விரைவில் அறிவிக்கும் தமிழக அரசு
சென்னை: இனி தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் 1.99 கோடி ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களையும் பொதுமக்கள் சிரமமின்றி பெற்று கொள்ள இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் உதவி செய்யும் என தமிழக அரசு கூறுகிறது.
இதுகுறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் இணைத்து விரைவில் முதல்வர் அறிவிப்பார்.
தமிழகத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இந்த திட்டத்தை முதல்வர் வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு இந்தியா வந்தவுடன் தொடங்கி வைக்கிறார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.