பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்தது... புதிய சாதனை படைத்த உற்சாகத்தில் அமைச்சர் மூர்த்தி!
சென்னை: பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்துள்ளதால் புதிய சாதனை படைத்த உற்சாகத்தில் இருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.
தமிழக அரசின் பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பத்திரபதிவு மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு ரூ.2,325 கோடி அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள தகவல் வருமாறு;

பதிவுத்துறை
பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், வரிசைக் கிரம டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.

ரூ.8,000 கோடி வருவாய்
அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணப் பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் எதிர்வரும் 28.09.2022 ஆம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்கள். இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூபாய் 5,757 கோடியை விட ரூபாய் 2,325 கோடி அதிகமாகும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பதிவுத்துறை வருவாயை அதிகரித்திருப்பதன் மூலம் துறை ரீதியாக தனது நிர்வாகத் திறமையையும், ஆளுமையையும் ஆட்சி மேலிடத்திற்கு வெளிப்படுத்திவிட்ட உற்சாகத்தில் இருக்கிறார் அவர்.

அதிரடி ஆய்வு
அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பதிவுத்துறை அலுவலகங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்துவதுடன் பொதுமக்களிடமும் குறைகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறார். அமைச்சர் மூர்த்தியிடம் தென்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்தை கண்டு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் திகைத்து நிற்கின்றனர்.












Click it and Unblock the Notifications