திமுக ஆட்சியில் 754 கோவில்களில் அன்னதானம்! அதிமுக ஆட்சியில் வெறும் 34! அமைச்சர் சேகர்பாபு தகவல்!
சென்னை: திமுக ஆட்சியில் தற்போது 754 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிமுக ஆட்சியில் வெறும் 34 கோவில்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்து பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும், இதுமட்டுமல்லாமல் 341 கோவில்களில் உணவுகள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளதையும் அமைச்சர் சேகர்பாபு சுட்டிக்காட்டினார்.

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதத்தின் போது அணைக்கட்டு தொகுதி உறுப்பினர் நந்தகுமார், தனது தொகுதியில் உள்ள ரெங்கநாதர் கோவில், பள்ளிகொண்டான் கோவில்களில் அன்னதானம் திட்டம் தொடங்கப்படுமா என வினவினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மேற்கண்ட விவரங்களை கூறி அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பழனி கோயில்
அதைத் தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி கோவிலில் கம்பிவட ஊர்தி அமைக்க வேண்டும் என பழனி தொகுதி எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அதிமுக ஆட்சியில் பழனி முருகன் கோவிலில் கம்பிவட ஊர்தி அமைக்க 70 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும், இப்போது அந்தப்பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு 18 மாதங்களில் ரோப் கார் சேவை தொடங்கப்படும் எனக் கூறினார்.

மருதமலை கோவில்
இதேபோல் மருதமலை கோவிலிலும் கம்பிவட ஊர்தி அமைக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜூணன் கோரிக்கை விடுத்தார். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, மருதமலை முருகன் கோவிலில் கம்பிவட ஊர்தி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருப்பதை தாம் அறிவேன் என்றும் ஆனால் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்ட மண் பரிசோதனையில் கம்பிவட ஊர்தி அமைப்பதற்கான சாத்தியக் கூறு இல்லை என தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

முக்கியத் தகவல்
இதனிடையே திமுக ஆட்சியில் தற்போது 754 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிமுக ஆட்சியில் வெறும் 34 கோவில்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் சேகபாபு கூறியுள்ள இந்த தகவல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications