துரை வைகோ மனதை குளிர்வித்த அமைச்சர் செந்தில்பாலாஜி! எதற்காக நடந்த சந்திப்பு தெரியுமா?
சென்னை: பல்வேறு கோரிக்கைகளுடன் தன்னை சந்திக்க வந்த மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோவை மனம் குளிரும் படி பேசி அனுப்பி வைத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
மேலும், துரை வைகோ தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் செய்து கொடுப்பதாக உறுதியையும் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
இது குறித்து பெருமிதத்துடன் துரை வைகோ தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
அமைச்சருடன் சந்திப்பு
நம்முடைய மின்வாரிய தொழிற்சங்கத்தின் அங்கீகாரம் மற்றும் விடுபட்ட கேங்மேன் பணி நியமன ஆணை விரைவாக வழங்கிட கோருதல், தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கின்ற கேங்மேன் பணியாளர்களுக்கு அவர்களது சொந்த மாவட்டங்களுக்கான பணியிட மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மின் துறை அமைச்சர் அண்ணன் செந்தில் பாலாஜியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம்.
அமைச்சர் தந்த உறுதி
அப்போது விடுபட்ட கேங்மேன் 5,493 பேருக்கு பணி நியமன ஆணை மிக விரைவில் வழங்கப்பட உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் நம்மிடம் தெரிவித்தார். அதுபோலவே தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் கேங்மேன் பணியாளர்களுக்கு அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்கின்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்தார்.
நீண்ட நேரம்
மேலும் கோவையில் இருந்து பொதுமக்கள் கோரிக்கைகளுடன் நிர்வாகிகள் வந்திருந்த நிலையில் அது குறித்தும் அமைச்சரிடம் பேசினோம். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதி அளித்து இருக்கின்றார். தனது மிக கடுமையான அன்றாட பணிச்சுமைகளுக்கு மத்தியில், நமக்கு நீண்ட நேரம் ஒதுக்கி, கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த அமைச்சருக்கு நமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து விடைபெற்றோம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
கட்சிக் காரர்களுக்காக
கட்சிக்காரர்களுக்கு ஒரு பிரச்சனை, உதவி என்றால் முதல் ஆளாக நின்று உதவி செய்யும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார் துரை வைகோ. தாம் ஒரு மூத்த அரசியல் கட்சித் தலைவர் மகன் என்ற பந்தா சிறிதும் இல்லாமல் மிகவும் எளிமையாக தனது கட்சி தொண்டர்களுக்காக அமைச்சர்களை சந்தித்து வருகிறார்.