குறுவை பாசனத்திற்காக... மேட்டூர் அணையை காலதாமதமின்றி திறக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
சென்னை: ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலதாமதமின்றி அறிவிப்பினை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மானியங்கள், விவசாயக்கடன், விதை மற்றும் இடுபொருட்கள் தடையின்றி கிடைத்திடவும், முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"சூப்பர் புயலாக மாறும் ஆம்பன்".. தமிழகத்திற்கு காத்திருக்கும் செம மழை.. எங்கெல்லாம் பெய்யும்?
விவசாயிகள் எதிர்பார்ப்பு
காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை முறையாகச் செய்திடவும் - அதற்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கும், ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து - குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணை நீர்ப்பாசனத்திற்குத் திறந்து விடப்படுவதில்லை என்ற நிலையே நீடித்து வருகிறது.
நீர்ப்பாசனம்
உரிய காலத்தில் குறுவை விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்திற்கு, அணை திறக்கப்படாததால் - விவசாயிகள் நொடித்துப் போயிருக்கிறார்கள்; கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; பல விவசாயிகள் கடன் சுமை தாளாமல், ‘வாழ்க்கையின் ஓரத்திற்கே' ஓடி, தற்கொலை செய்து கொண்டு சாவூருக்கு ஏகி விட்டார்கள்.
கவலையளிக்கிறது
இந்த முறை நல்ல வாய்ப்பாக, இயற்கையாகவே மேட்டூர் அணையில் தற்போது போதிய நீர் - அதன் முழு கொள்ளளவான 120 அடியில், 100 அடி நீர் இருக்கிறது. தென்மேற்குப் பருவ மழையும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. வழக்கமாக, 90 அடி நீர் இருப்பு இருந்தாலே, ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும். இப்போது கையிருப்பு நீர் இருந்தும், இதுவரை அ.தி.மு.க. அரசு அணை திறப்பது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது.
தண்ணீர் திறக்கவும்
ஆகவே, வருகின்ற ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, காலதாமதமின்றி அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேட்டூர் அணை திறப்பு குறித்து இப்போதே அறிவிப்பு வெளியிடுவது, குறுவை விவசாயிகளுக்கு ஊக்கத்தை அளித்து, வேளாண்மைத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு உதவும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.