"தலைவரே.. இப்டியெல்லாம் நடக்குது".. விசுவாசிக்கு ஸ்டாலின் தந்த பதவி.. அதிருப்தியில் பழம் புள்ளிகள்!
அன்பகம் கலைக்கு புதிய பொறுப்பை தந்ததால், நிர்வாகிகள் அப்செட்டில் உள்ளனராம்
சென்னை:தன்னுடைய "விசுவாசிக்கு" முதல்வர் ஸ்டாலின் புதிய பொறுப்பை தந்ததையடுத்து, சில சீனியர்கள், நிர்வாகிகளுக்கு கலக்கம் சூழ்ந்துள்ளதாம்..!
திமுகவில் அமைப்பு செயலாளர் பதவி என்பது வலிமையானது.. சற்று அதிகாரம் மிக்க பதவி.. இப்போதைக்கு இந்த அமைப்புச் செயலாளராக மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி இருக்கிறார்.
அவரது பணி சுமையை குறைப்பதற்காக அமைப்புச் செயலாளர் பதவியை 2ஆக மாற்ற தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்..

துணை அமைப்பு செயலர்
தற்போது துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டிருக்கிறார். உரிய முக்கியத்துவம் இல்லாமல் கட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளதாக வருத்தத்தில் இருந்தார் கலை.. ஏதோ ஒரு பழைய சம்பவம் குறித்து தகவல் கேட்பதற்காக கலைக்கு போனை போட்டுள்ளார் ஸ்டாலின். அப்போதுதான், தலைவரே இப்படியெல்லாம் நடக்குது என்று புலம்பி தள்ளி தன்னுடைய வேதனையையும் கலை வெளிப்படுத்தி உள்ளார்.. அதன்பிறகுதான் ஸ்டாலின் புரிந்து கொண்டு, இப்படி ஒரு பதவியை திடீரென அறிவித்துள்ளார் முதல்வர்.

அறிவாலயம்
அறிவாலயத்தில் சமீப காலமாக நடக்கும் தவறுகள், ஸ்டாலினின் கவனத்துக்கு போவதில்லை... பத்திரிகைகளில் செய்தி வரும் போதுதான் ஸ்டாலினுக்கே அப்படி ஒரு விஷயம் நடப்பது தெரியவருகிறது.. அதனால்தான், நம்பகத்தன்மை வாய்ந்த கலையை நியமனம் செய்தார். அறிவாலயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருபவர்களுக்கு செக் வைப்பதற்காகவே இந்த நியமனம் நடந்துள்ளது.

சீனியர்கள்
கலை நியமனம் ஒரு பக்கம் ஆச்சரியத்தை தந்து வந்தாலும், மறுபக்கம் அதிருப்திகளையும் சில சீனியர்கள், நிர்வாகிகளுக்கு தந்து வருகிறதாம்.. அறிவாலயத்தில் வேலை பார்க்கும் மேலாளர்கள், மூத்த நிர்வாகிகள் சிலரது அதிகாரம் கொடி கட்டி பறந்து வருகிறது.. இவர்களை ஆஃப் செய்யவே கலை தன் வேலையை ஆரம்பித்துள்ளாராம்.. இதுபோக மேலும் சிலரை கண்காணிக்கும் பணியும் தொடங்கி உள்ளதாம்.. இதனால், இத்தனை நாளும் அதிகாரம் செலுத்தி கொண்டிருந்தவர்கள் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது..

நிர்வாகிகள்
அதுமட்டுமல்ல, கலையின் நியமனத்திலும் இன்னொரு அதிருப்தி நிலவுகிறது.. கட்சியின் இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தின் நிர்வாகியாக இருந்தவர்தான் கலை. அதாவது ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தபோது அதன் தலைமையகமான அன்பகத்தில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் கலை தான் கவனித்து கொள்வது வழக்கம்.. அதனாலேயே அவருக்கு அன்பகம் கலை என்ற பெயர். ஸ்டாலினுக்கு பிறகு இளைஞரணி செயலாளராக பதவி ஏற்ற பிறகு உதயநிதிக்கும் நம்பிக்கைக்குரியவராக கலை இருந்து வருகிறார்.

களையெடுப்பு?
எனவே, இதற்கு முன்பு வேறு எந்த பொறுப்பிலும் கலை இருந்தது இல்லை... அப்படி இருக்கும்போது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்கும்போது, கலைக்கு மட்டும் இப்படி ஒரு உயர்ந்த பொறுப்பா என்ற பொருமலும் எழுந்துள்ளதாம்.. கலை ஆரம்பித்துள்ள வேலை விரைவில் நிறைய களையெடுப்புகளை திமுகவுக்குள் பெற்று தரும் என்கிறார்கள்..!












Click it and Unblock the Notifications