இந்த ஆண்டே மருத்துவ படிப்பில்.. ஓபிசிக்கு 50% ஒதுக்கீடு தர வேண்டும்.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே ஒதுக்கீடு கோரி, பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்
சென்னை: இந்த ஆண்டு 50 சதவீத ஓபிசி மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஹைகோர்ட் உத்தரவை குறிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. அதில், ஹைகோர்ட் உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50சதவீத இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் இந்த வருடம் வழங்க முடியாது என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வழக்குகள்
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது... அதன்படி, படிப்பில் ஒபிசி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், இடைக்கால நிவாரணம் கோரிய இந்த மனு நிராகரிக்கப்படுகிறது,

ஒபிசி பிரிவு
மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்த வருடம் 50 சதவீத ஓபிசி மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரது கடிதத்தில், அவர் தெரிவித்துள்ளதாவது:

கடிதம்
ஓபிசி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப்படாதது ஏமாற்றம் தருகிறது.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும். 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்... தீர்வு காண வேண்டும்.. அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி நாம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக கூட்டணி
முன்னதாக, தமிழக முதல்வருக்கும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்... அதில், இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாக பிரதமருக்கு கொடுக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications