வேதனையா இருக்கு.. 12 மீனவர்களை இலங்கை விடுவிக்கனும்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 12 தமிழ்நாடு மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவிக்க தூதரக ரீதியில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்கக் கோரியும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயலைக் கட்டுப்படுத்திடவும், மீனவர்களின் மீன்பிடிப் படகினை விடுவித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு, அமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6-4-2023) கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: அக்கடிதத்தில் 5-4-2023 அன்று தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 1-4-2023 அன்று 12 மீனவர்களுடன் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள், புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள்) IND-PY-PK-MM-969 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும் 5-4-2023 அன்று அதிகாலை 1-00 மணியளவில் கிழக்குக் கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் காயம்: இந்தத் தாக்குதலில் 4 மீனவர்களின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும். தாக்குதலுக்குள்ளான மீனவர்களுக்குச் சொந்தமான 7 செல்போன்கள் மற்றும் மீன்களை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டைச் சார்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று அடிக்கடி தாக்குதல் நடத்துவது மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திடும் இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய போக்கினை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று கட்டுப்படுத்திடவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இலங்கை அரசின் வசமுள்ள 12 மீனவர்களையும், 109 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தூதரக நடவடிக்கைகளை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் மேற்கொள்ள வேண்டுமென்று தனது கடிதத்தின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications