முருக பக்தர்களுக்காக அப்துல்லா எம்.பி கோரிக்கை ‘மத நல்லிணக்கம்.. தமிழ்நாடுன்னா சும்மாவா?’ திமுக குஷி
சென்னை : தமிழ்நாடு பல நேரங்களில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது. பல ஊர்களில் இந்து கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்பது நிகழ்கிறது.
அதேபோல, இஸ்லாமியரின் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளின்போது இந்துக்கள் சமையலுக்கான பொருட்கள் வாங்கி அளிப்பது போன்ற விஷயங்களை பாரம்பரியமாகச் செய்து வருவதைக் காண்கிறோம்.
இந்நிலையில், முருக பக்தர்களுக்காக அப்துல்லா எம்.பி, தென்னக ரயில்வேவுக்கு வைத்துள்ள கோரிக்கை பலராலும் நெகிழ்ச்சியாக பகிரப்பட்டு வருகிறது.

முருக பக்தர்களுக்காக அப்துல்லா கோரிக்கை
தென் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரள்வதால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு தி.மு.கவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

முருக பக்தர்கள்
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு எம்.எம்.அப்துல்லா எம்.பி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், "தமிழகத்தில் உள்ள பழநி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நடைபெறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பெரும்பாலும் மக்கள் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.

சிறப்பு ரயில்
ஆகையால், பழநி வழியாக மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்செந்தூர் வழியாக பழநியில் இருந்து திண்டுக்கல், திருச்செந்தூர் வழியாக செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தனது மனுவில் அப்துல்லா எம்.பி தெரிவித்துள்ளார்.

காரைக்குடிக்கும்
மேலும், பழநி வழியாக செங்கோட்டையில் இருந்து மதுரை, பழநி மற்றும் புதுக்கோட்டை வழியாக காரைக்குடியில் இருந்து திருச்சிக்கும், திருச்செந்தூர், புதுக்கோட்டை வழியாக திருச்சியில் இருந்து காரைக்குடிக்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என எம்.எம்.அப்துல்லா எம்.பி தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த எம்.பி ஒருவர் முருக பக்தர்களுக்காக கோரிக்கை விடுத்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications