அன்று 'தீட்டு' என்று ஒதுக்கினார்கள்! இன்று 'நீட்' என்று ஒதுக்குகிறார்கள்! ஜவாஹிருல்லா விளாசல்!
சென்னை: சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவை ஆதரித்து பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, 'தீட்டு' என்று கூறி அன்று ஒதுக்கியது போல் இன்று 'நீட்' என்று கூறி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் முகவராக இங்கு செயல்படக் கூடாது என்பதை சூசகமாக சுட்டிக்காட்டி பேசிய அவர், ஆளுநரின் விளக்க கடிதத்தை படிக்கும் போதும் மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவுக்கே முன் மாதிரி மாநிலமாக தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்கி வருவதாக ஜவாஹிருல்லா பெருமிதம் தெரிவித்தார்.

ஆளுநர் தேவையில்லை
மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என்பதற்காக ஒரு புதிய இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த ஜவாஹிருல்லா, ஆளுநரின் விளக்க கடிதம் தொடர்பாக சரமாரியாக குற்றஞ்சாட்டினார். நீட் விலக்கு கோரி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கை காமாலை நோயின் பிரதிபலிப்பாக உள்ளதாக ஆளுநர் தெரிவித்திருப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது எனக் கூறினார்.

கருத்து திணிப்பு
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநர் ரவி அளித்துள்ள விளக்கக் கடிதத்தில் அவரது சுய கருத்தை திணித்திருப்பதாகவும் ஆளுநரின் அவல நிலையை இது எடுக்காட்டுவதாகவும் ஆவேசம் காட்டினார். இதனிடையே அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ஆளுநரின் அவலநிலை என்ற வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். பிறகு தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒப்பாக உத்திரப்பிரதேசத்தில் உள்ள அரசுப்பள்ளியை சொல்ல முடியுமா என ஆளுநருக்கு சவால் விடுத்தார்.

கடும் சாடல்
மேலும், ஆளுநர் ரவி குறித்து ஜவாஹிருல்லா கடுமையாக சாடி பேசி வந்த நிலையில் நேரம் முடிந்தது என சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டார். இருப்பினும் தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, நீட் தேர்வை மையமாக வைத்து இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதால் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கான முக்கியத்துவம் குறைவதையும் சுட்டிக்காட்டினார். மருத்துவராகும் ஒருவருக்கு பொது அறிவு இருக்க வேண்டியது அவசியம் என்பதையும் குறிப்பிட்டார்.
Recommended Video

நீட் இல்லா தமிழகம்
இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்ததை போல் நீட் தேர்விலும் முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு பெற்றுக்கொடுப்பார் என நம்பிக்கை தெரிவித்த அவர், நீட் இல்லா தமிழகம் உருவாவதற்கு தாங்கள் துணை நிற்போம் என்ற உறுதியை அளித்தார்.












Click it and Unblock the Notifications