சரியான நேரத்தில் பேசிவிட்டார்.. செம துணிச்சல்.. ஒரே கடிதம்.. தேசிய அளவில் கமல்ஹாசன் பதித்த தடம்!
சென்னை: கொரோனாவிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாட்டை மிக காந்திரமாக விமர்சனம் செய்ததன் மூலம் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளார்.
கொரோனாவிற்கு எதிராக இந்தியா தனது தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்து உள்ளது. கொரோனாவிடம் அமெரிக்கா ஏறத்தாழ தோல்வி அடைந்துள்ள நிலையில், அப்படி ஒரு சூழ்நிலை வர கூடாது என்று இந்தியா மிக தீவிரமாக போராடி வருகிறது.
இந்தியா முழுக்க மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் மிக தீவிரமாக கொரோனாவிற்கு எதிராக பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவிற்கு எதிராக செயலாற்றும் வகையில் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சில தவறான விஷயங்கள்
கொரோனாவிற்கு எதிராக எல்லோரும் இப்படி போராடி வரும் நிலையில் அவ்வப்போது பிரதமர் மோடி சில அறிவிப்புகளை வெளியிட்டு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். உதாரணமாக மக்களுக்கு போதிய அவகாசம் கொடுக்காமல் லாக் டவுனை அறிவித்தது, மக்களை கைதட்ட சொன்னதன் மூலம் பலர் கூட்டமாக வெளியே கூடியது, மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும் நேரத்தில் எல்லோரையும் வீட்டிற்கு மேலே வந்து விளக்கு ஏற்ற சொன்னது என்று பல விஷயங்கள் விமர்சனங்களை சந்தித்து.

கடுமையான விமர்சனம்
முக்கியமாக டெல்லியில் இருந்து வெளியூர் பணியாளர்கள் வெளியேறியது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் அதை தடுக்காதது.கொரோனாவிற்கு எதிராக போதிய கால அவகாசம் இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது என்று பல விஷயங்கள் இதில் மத்திய அரசு மீது விமர்சனங்களாக வைக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பலர் இந்த விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.

பெரிய தலைவர் பேசவில்லை
ஆனால் மத்திய அரசின் இது போன்ற அறிவிப்புகளை எதிர்கட்சித் தலைவர்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. காங்கிரஸ் தலைவர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், திமுக கூட இதை பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. டெல்லியில் மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக சென்றார்கள்.இதை பயன்படுத்தி மக்களை தங்கள் பக்கம் திரட்ட வாய்ப்பு இருந்தும் கூட அதை காங்கிரஸ் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மட்டும் இதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

கடிதம் எழுதி உள்ளார்
நேற்று பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எழுதிய கடிதம், இப்போதும் கூட சமூக வலைதளங்களில் பெரிய பேச்சாக இருந்து வருகிறது. அவர் தனது கடிதத்தில், இந்த ஊரடங்கு உத்தரவை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய்ததுபோலவே எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல் செய்துள்ளீர்கள். நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பதை காலம் தினமும் எனக்கு உணர்த்துகிறது. நீங்கள் சொல்வதை செய்கிறார்கள் என்பதால் மக்கள் உங்களுக்கு அடிமை என்று நினைக்க கூடாது.

நாங்கள் அடிமை இல்லை
நீங்கள் பணக்காரர்களை கைதட்ட வைக்கிறீர்கள் , விளக்கு ஏற்ற வைக்கிறார்கள். ஆனால் அங்கே ஏழைகளின் வாழ்க்கை நிர்கதியாகி உள்ளது. பால்கனியில் எண்ணெய் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும்போது, ஏழைகள் உணவு இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உங்கள் அரசு ஒரு பால்கனி அரசு போல மாறிவிட்டது. பால்கனி இருப்பவர்களை பற்றி யோசிக்கும் இந்த அரசு, தலைக்கு மேலே கூரையே இல்லாமல் இருக்கும் மக்கள் குறித்தும் யோசிக்க வேண்டும்.

நீங்கள் செய்த தவறு இது
இந்த பிரச்சனைக்கு சாதாரண மக்களை குறை சொல்ல முடியாது. நீங்கள்தான் இதற்கு காரணம். இந்தியாவிற்காக அல்லும் பகலும் அயராமல் உழைக்கும் அறிவாளிகளை நீங்கள் காக்கவில்லை. அறிவாளிகள் என்று கூறியது உங்களுக்கு பிடித்து இருக்காது. உங்களுக்கும், அரசுக்கும் அது பிடிக்காத வார்த்தை. நான் பெரியாரையும் காந்தியையும் பின் தொடர்பவன். அவர்கள் எல்லோரும் அறிவாளிகள், என்று கமல்ஹாசன் மிக காட்டமாக இந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
|
அச்சம் இல்லை
மிக சரியான தருணத்தை பயன்படுத்தி கமல்ஹாசன் இந்த சரியான கடிதத்தை எழுதி உள்ளார். நாடு முழுக்க கை தட்டுவதையும், விளக்கு ஏற்றுவதையும் விமர்சனம் செய்ய அரசியல்வாதிகள் அச்சப்பட்டு உள்ளார். ஆனால் எந்த விதமான அச்சமும் இன்றி, பாஜகவின் ஆன்லைன் ஆர்மிக்கு பயமின்றி மிக துணிச்சலாக கமல்ஹாசன் இதை பேசி உள்ளார். இதன் மூலம் வரும் பின் விளைவுகளை தெரிந்தே பேசி உள்ளார்.

சொல்ல வேண்டியதை வெளிப்படையாக சொன்னார்
முக்கியமாக அவர் தனது கடிதத்தில் மருத்துவர்கள் குறித்தும், ஏழைகள் குறித்தும் தீவிரமாக பேசி இருகிறார். தனது திரையுலகிலேயே பலர் அரசின் இந்த செயலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போது, பேச வேண்டியதை சரியான நேரத்தில் சொல்லி இருக்கிறார். இந்த கடிதத்தில் கமல்ஹாசனிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மைதான் கவனம் ஈர்த்து உள்ளது . திமுகவிடம் இருந்து வர வேண்டிய கடிதம் ஒன்று கமல்ஹாசனிடம் இருந்து வந்துள்ளது.

பல நாள் கோபம்
கமல்ஹாசன் மிக சரியான நேரத்தில் இப்படி பேசி இருக்கிறார் என்று அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். அரசை எதிர்க்க பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் கூட பயப்படுகிறார்கள். மமதா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூட மத்திய பாஜக அரசின் செயல்களை பெரிதாக கேள்வி கேட்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் மிக கடுமையாக அரசை நேர்மையாக கேள்வி கேட்டு இருக்கிறார்.

மக்களின் குரல் இதுதான்
இது அவரின் மனதிற்குள் பல நாட்களாக இருந்த குரல் என்று கூட கூறலாம். பல நாட்களாக அடைத்து வைத்து இருந்த விஷயங்களை ''நான் பெரியாரின் பின் தொடர்பாளர்'' என்று அதிரடியாக பேசி உள்ளார். அதோடு சமூக வலைதளங்களில் மக்களின் குரலை கவனித்து அதை பிரதமரிடம் அழுத்தமாக கமல்ஹாசன் வெளிப்படுத்தி உள்ளார். மக்கள் பேசுவதை கடிதமாக எழுதி உள்ளார். மற்ற அரசியல் தலைவர்கள் எங்கே தவறினார்களோ அங்கே தனது தடத்தை கமல்ஹாசன் பதித்து இருக்கிறார்.

தேசிய அளவில் முக்கிய இடம் பிடிப்பார்
இதன் மூலம் தேசிய அளவில் கமல்ஹாசனின் அரசியல் பார்வை முதல் முறை கவனம் பெற்றுள்ளது. தன்னுடைய கொள்கை இதுதான் என்று கமல்ஹாசன் முதல்முறை தனது கடிதம் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். இதே வேகத்தில் அவர் செயல்பட்டால் கண்டிப்பாக தேசிய அளவில் அவர் பக்கம் கவனம் திரும்பும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்திடம் சொன்னதை அவரே படிப்பது.. அவருக்கே கூட உதவும்.. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை!












Click it and Unblock the Notifications