வாக்குப்பதிவு முடிந்த உடனேயே கமல் கட்சியில் ஷாக்.. முக்கிய பிரமுகர் விலகல்.. என்ன காரணம்
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சற்று நேரத்திலேயே மாணவர் அணித் தலைவராக இருந்த சங்கர் ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018இல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார்.. அடுத்தாண்டே நடந்த லோக்சபா தேர்தலில் களமிறங்கிய அவர் 3.71 சதவிகித வாக்குகளைப் பெற்று மக்களிடையே கவனம் பெற்றது.

இருப்பினும் 2021 சட்டசபைத் தேர்தலில் அவரால் பெரியளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்தச் சூழலில் தான் அவர் இந்த லோக்சபா தேர்தலுக்கு திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளார்.
தேர்தல் முடிந்த கையோடு அறிவிப்பு: அவருக்கு லோக்சபா தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக 2025ல் ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து கமல்ஹாசன், திமுக கூட்டணியை ஆதரித்து சில தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இந்தச் சூழலில் தான் இன்று லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த உடனேயே அக்கட்சியின் மாணவர் அணித் தலைவராக இருந்த சங்கர் ரவி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாகப் பரபர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விலகல்: இது தொடர்பாக சங்கர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியில் எனக்கு எதிராகத் தொடர்ந்து பல பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த உடன் கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்து இருந்தேன். இது சில வாரங்களுக்கு முன்பே எடுத்த முடிவு.
சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் எனக்கு ஏமாற்றத்தை அளித்தன.. அது நம்பிக்கையின்மை, போலியான உத்தரவாதம் காரணமாக ஏற்பட்டவை. குறிப்பாக எனது பணிகளை நிறுத்த அழுத்தம் இருந்ததாக நான் உணர்ந்தேன்.
என்ன காரணம்: இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல என்ற போதிலும் கட்சித் தலைமையின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இருப்பினும் நான் நினைத்ததிற்கு நேர்மாறாகவே விஷயங்கள் நடந்தன. எனக்கு வெளியே சில வாய்ப்புகள் இருந்த போதிலும் அதைத் தவிர்த்துவிட்டு கட்சிக்காக உழைத்தேன். ஆனால், உட்கட்சி அரசியலால் நான் சலிப்படைந்துவிட்டேன். இதனால் நான் இப்போது உறுதியான முடிவை எடுத்துள்ளேன்.
உட்கட்சி பிரச்சினை: கட்சியில் நீண்ட காலமாகப் பல உட்கட்சி பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறேன். இதில் யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. நேற்று வரை நான் கட்சிக்காக உழைத்து இருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் கட்சி சார்பில் குறைந்தது ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். அவை அனைத்திற்குமான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் உள்ளன.
கடைசி வரை நான் கட்சிக்காக உழைத்தேன். வரும் காலத்திலாவது மக்கள் நீதி மய்யம் இளைஞர்களையோ அல்லது கட்சிக்காக உழைத்தவர்களையோ புறக்கணிக்காது என நம்புகிறேன். நான் எனது சொந்த அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications