புரட்டி போடும் "முரட்டு மோக்கா".. 175 கி.மீ வேகத்தில் காற்று.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அந்த தகவல்
சென்னை: வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது.. மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது.
பின்னர் வங்கதேசம், மியான்மர் அருகே போர்ட் பிளேருக்கு 520 கி.மீ தொலைவில் நிலை கொண்டது.. இதுகுறித்து நேற்றைய தினம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது.

அதி தீவிரம்: அதன்படி, மத்திய வங்கக்கடலில் இருந்து படிப்படியாக அதிதீவிர புயலாக மாறி வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மே 14-ம் தேதி தென்கிழக்கு வங்க தேசம் - வடக்கு மியான்மர் இடையே மோக்கா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல சென்னை வானிலை நிலையம் இதுகுறித்து அறிவிப்பில், மோக்கா புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்து.. மேலும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்றும், ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
மேலாண்மை துறை: இதனிடையே, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையானது, பிரத்யேக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.. அதில், வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ம் தேதி வரை மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விசைப்படகுகள், மீனவர்கள் விரைவாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசும் இப்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது..இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அமைச்சர் ராமச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, சிறப்பு எச்சரிக்கையின்படி வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மீன்வளத் துறை கமிஷனருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும், விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
படகுகள்: மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர், வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள், மே 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது... ஏற்கனவே கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள், விரைவாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications