ரிதன்யா தற்கொலைக்கு! வெளியே சொல்ல முடியாத காரணம் இருக்கு! FIR-ல் என்ன இருக்கு? கலங்கிய வக்கீல்
சென்னை: அவிநாசியில் தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண் ரிதன்யா சாவுக்கு வரதட்சணை மட்டும் காரணமில்லை, வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பல காரணங்கள் உள்ளது என அந்த பெண் வீட்டு தரப்பு வழக்கறிஞர் கலக்கத்துடன் தெரிவித்தார்.
இதுகுறித்து ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: இறந்த ரிதன்யாவின் கணவரும் மாமனாரும் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் மனு கொடுக்கக் கூடாது என ரிதன்யாவின் தந்தை இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுக்கள் நேற்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜாமீன் கேட்டவர்களே எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என கோரியதன் அடிப்படையில் இந்த பிணை மனுக்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு அமர்வு நீதிமன்ற வழக்குகளில் 10 நாட்களுக்கு முன்பாக யார் ஒருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்வதில்லை. ரிதன்யாவின் மாமனார் குடும்பத்தினர் அரசியல் மற்றும் பணபலம் மிக்கவர்களாக இருந்ததால், ரிதன்யா இறந்து அந்த சாம்பலில் உள்ள உஷ்ணம் ஆறுவதற்கு முன்பு, இரண்டே நாட்களில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்கள்.
இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை வருகிறது. முதல் தகவல் அறிக்கையில் ரிதன்யா இறந்ததற்கு முக்கிய காரணமே, அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரதட்சணை மட்டுமல்லாமல் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அந்த பெண்ணுக்கு கொடுமைகள் நடந்துள்ளன. காவல் துறையின் புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அனைத்து விவரங்களையும் தற்போது வெளியே சொல்ல இயலாது. இவ்வாறு அந்த வழக்கறிஞர் கலக்கத்துடன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைக்காட்டிப்புதூரைச் சேர்ந்த 27 வயதான ரிதன்யா, கடந்த ஏப்ரல் 11, 2025 அன்று கவின் குமார் என்பவரை மணந்தார். திருமணத்தின்போது, ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கினர். இருப்பினும், கணவர் கவின் குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையும், பணமும் கேட்டு ரிதன்யாவை கடுமையாக துன்புறுத்தத் தொடங்கினர். இந்த தொடர்ச்சியான உடல் மற்றும் மனரீதியான சித்திரவதைகள் ரிதன்யாவை மன உளைச்சலுக்குத் தள்ளின.
தாங்க முடியாத வேதனையில், ரிதன்யா ஜூன் 28 அன்று மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன், தனது பெற்றோருக்கு எட்டு உருக்கமான ஆடியோ செய்திகளை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோக்களில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு அளித்த கொடுமைகளை ரிதன்யா விரிவாகப் பதிவு செய்திருந்தார். இந்த ஆடியோக்கள், வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமாக மாறி, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வழிவகுத்தன.
இந்த வழக்கில் இதுவரை மூன்று முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்:
கவின் குமார்: ரிதன்யாவின் கணவர்.
ஈஸ்வரமூர்த்தி: கவின் குமாரின் தந்தை.
சித்ராதேவி: கவின் குமாரின் தாய்.
(ஆரம்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக கைது செய்யப்படாமல் இருந்த இவர், ரிதன்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் விளைவாக, ஜூலை 4 அன்று கைது செய்யப்பட்டார்.)
சேவூர் போலீசார், இவர்கள் மூவர் மீதும் துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது, கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக, இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 7, 2025 திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக கோட்டாட்சியர் (RDO) விசாரணையும் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications