தமிழ்நாடு போல் பஞ்சாப் அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டம் போல் ஒரு சிறந்த திட்டம் இல்லை என்று பாராட்டியுள்ள பகவந்த் மான், 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது மிகப்பெரிய சாதனை என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன்பின் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய ஸ்டாலின், அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த காலை உணவு திட்டம் மூலமாக 34,987 பள்ளிகளைச் சேர்ந்த 17,53,257 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதும் சிறப்பான திட்டம். தமிழ்நாட்டைப் போல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டு உணவு தான் தேசிய உணவாக இருந்து வருகிறது. இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும், தென் மாநில உணவுகளே நிறைந்திருக்கின்றன.
காலை உணவுத் திட்டம் போல் ஒரு சிறந்த திட்டம் இல்லை என்று சொல்லுவேன். ஏனென்றால் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது மிகப்பெரிய சாதனை. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை முதல்வர் ஸ்டாலின் இங்கு கூறியதை மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன். ஆம் ஆத்மி கட்சி சாமானிய மக்களுக்கான கட்சி.
எப்போதும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பஞ்சாப் அரசு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. ஆம் ஆத்மி கிளினிக்குகளில் சுமார் 70 ஆயிரம் பேர் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதனை விரைவில் விரிவாக்கம் செய்ய உள்ளோம். அதேபோல் நாளையே பஞ்சாப் அமைச்சரவையில் காலை உணவுத் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளேன்.
பகத் சிங், ராஜகுரு உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்த மண்ணான பஞ்சாப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்தபின் செயல்படுத்திய இலவச பேருந்து பயணத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஆகியவை நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது திமுகவின் மற்றொரு திட்டமான காலை உணவுத் திட்டம் அடுத்ததாக பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை திமுகவினர் வரவேற்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திமுகவின் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக அமைந்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications