மயிலாப்பூர் தொகுதி.. முட்டிமோதும் வளர்மதி, நிர்மலா பெரியசாமி.. எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன?
சென்னை: சென்னையின் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் அதிக முனைப்பு காட்டி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலியை கொடுத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் வளர்மதி, வைகைச் செல்வன், முன்னாள் எம்பி ஜெயவர்தன், நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட பலரும் முட்டி மோதி வருவதாக சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருக்கிறார். ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த போதே வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளர்களை முடிவு செய்யாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அதிமுகவின் பல்வேறு முக்கியத் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட த.வேலு 68,392 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக சார்பாக போட்டியிட்ட ஆர்.நட்ராஜ் 55,759 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 12,600 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்தது.
அதிமுகவின் இந்த தோல்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபிரியா முக்கிய காரணமாக இருந்தார். அவர் மயிலாப்பூர் தொகுதியில் சுமார் 15 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். இந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அதேபோல் SIR பணிகள் காரணமாக சுமார் 88 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கிறது.
இம்முறை புதிதாக தவெக தலைவர் விஜய்யும் களத்தில் இருப்பதால், அவர்கள் எவ்வளவு வாக்குகளை பிரிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மயிலாப்பூர் தொகுதியை பொறுத்தவரை பிராமண சமூக மக்கள், மீனவர்கள், வடமாநில மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால், அதிமுக வெல்லும் என்று அக்கட்சியினர் கருதி வருகின்றனர்.
அதனால் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிமுக அமைச்சர் வளர்மதி, ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், அதிமுக நிர்வாகி நிர்மலா பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மற்றும் மாவட்டச் செயலாளர் அசோக் உள்ளிட்டோர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications