கமல் இல்லை.. இது சீமானின் விஸ்வரூபம்.. தினகரனையும் ஒவர் டேக்.. மிஞ்சிய நாம் தமிழர்
சென்னை: தமிகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் நாம் தமிழர் கட்சி 29,58,458 வாக்குகள் வாங்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாமக, பாஜக, மதிமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகளைவிட அதிக வாக்குகளையும் வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளனர்.
சக போட்டி கட்சிகளான மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முனனேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் தாண்டி அதிக வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.
இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக ஆகியவற்றுக்கு கிடைத்ததை விட குறைவான அளவே ஊடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு வெளிச்சம் கிடைத்தது. ஆனாலும் இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகளையும் கூட்டினாலும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை எட்ட முடியாத அளவிற்கு விழுந்துள்ளது.

மநீம பெற்ற வாக்குகள்
இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், பல்வேறு இடங்களில் மிக சொற்பமான வாக்குகளையே பெற்றது. ஆனால் கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் மட்டும் அதிக வாக்குகளை பெற்றது. குறிப்பாக கோவை மாநகர் பகுதிகளில் உள்ள தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றது. இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றியை மநீம தடுத்து நிறுத்தி உள்ளது. ஒட்டுமொத்தமாக மக்கள் நீதி மய்யம் 1058847 வாக்குகள் பெற்றது.

3வது இடம் நாம் தமிழர்
ஆனால் நாம் தமிழர் கட்சி கொங்குமண்டலம் என்றில்லை, தென் மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதுமே பரவலாக கணிசமான வாக்குகள் வாங்கி உள்ளது. திமுக, அதிமுகவிற்கு அடுத்த இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. திமுகவிற்கு 1கோடியே 56 லட்சத்து 85 ஆயிரத்து 421 வாக்குகள் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிமுகவிற்கு 1கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 410 வாக்குகள் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தான் 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் வாங்கி உள்ளது.

திருவெற்றியூர்
மக்கள் நீதி மய்யத்திற்கு அதிகபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் 51481 வாக்குகள் கிடைத்திருந்தது. அங்கு போட்டியிட்ட கமல் வெறும் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார்,. நாம் தமிழர் கட்சிக்கு அதிகபட்சமாக திருவெற்றியூர் தொகுதியில் 48597 வாக்குகள் கிடைத்து. அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளரிடம் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சீமான் தோல்வியை தழுவினார்.

சீமானுக்கே அதிக ஆதரவு
மக்கள் நீதி மய்யத்துடன் நாம் தமிழர் கட்சியை ஒப்பிட்டால், நாம் தமிழர் கட்சிக்கே தமிழகத்தில் அதிக ஆதரவு உள்ளது. அந்த ஆதரவும் மிகபரவலாக உள்ளது. நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதம் பெற்ற 3வது கட்சியாக உள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யம் இந்த பட்டியலில் 8வது இடத்தையே பிடித்துள்ளது. தொடர்ந்து தனித்து போட்டியிடுவது, திமுக, அதிமுகவை விமர்சித்து கவர்ச்சிகரமாக பேசுவது ஆகிவற்றை ரசிக்கும் இளைஞர் கூட்டம் சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் ஆதரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் மநீமவை பொறுத்தவரை கமல்ஹாசன் மற்றும் ஒரு சில தனிநபர்களுக்கே கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது. பொதுவாக அந்த கட்சிக்கு பெரிய ஆதரவு என்பது இந்த முறை தமிழகத்தில் கிடைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. பார்ப்போம் இனி அடுத்த தேர்தலில் நிலைமை எப்படி மாறும் என்பதை..!












Click it and Unblock the Notifications