டிச.23.. முக்கிய முடிவை எடுக்கும் ஓ பன்னீர் செல்வம்? பண்ருட்டி தலைமையில் நடக்கப்போகும் ஆலோசனை!
சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக்கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பின் அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார். பாஜக உடன் இணக்கமான சூழ்நிலையிலும் இருந்த ஓ. பன்னீர்செல்வம், தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி கடந்த ஜூலை மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

என்.டி.ஏ கூட்டணியில் இணைகிறாரா?
இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம் என்று பேச்சு எழுந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லிக்கு சென்ற ஓ. பன்னீர்செல்வம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பி.எஸ்., தனிக்கட்சி தொடங்கப்போவதாக நான் ஒருபோதும் கூறவில்லை என்றார்.
அதுமட்டும் இன்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து டிசம்பர் 15 ஆம் தேதி முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறிய நிலையில், அந்த கூட்டத்தையும் ரத்து செய்தார். இதனால் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளாரா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர டெல்லி பாஜக மேலிடம் விரும்புகிறது.
23 ஆம் தேதி கூட்டம்
இதனால், இருவரையும் சரிகட்டி கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 23 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நயினார் நாகேந்திரன்
டெல்லியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முகாமிட்டுள்ளார். நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரையும் நயினார் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தமிழக அரசியல் சூழல், கூட்டணி நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேச வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில்தான், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆலோசனைக் கூட்டத்தை 23 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார். அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். அப்போது பல்வேறு பரபரப்பு சந்திப்புகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications