நேரில் அழைத்த தலைமை! நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா கடிதம்? பரபரப்பான எக்ஸ்குளூசிவ் தகவல்!
சென்னை: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனை நேற்று நேரில் அழைத்த திமுக தலைமை அவர் மீதான கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகளை சற்று சீரியஸாக விசாரித்துள்ளது.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் அதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் இருந்து வருகின்றனர்.

இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படும். இதனிடையே நெல்லை மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் அமைச்சர் நேருவை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போது கவுன்சிலர்களை போங்க பேசிக்கலாம் எனக் கூறி சமாதானம் செய்து வைத்து ஊருக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர் நேரு.
ஆனாலும் அதன்பிறகு நெல்லை மேயர் சரவணன் மீதான அதிருப்தி குரல்கள் குறைந்தபாடில்லை. இதனால் திமுக தலைமைக்கு நெல்லையிலிருந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்தச் சூழலில் நேற்று நேரில் அழைத்த தலைமை மேயர் சரவணனிடம் அவர் மீதான புகார்களுக்கு விளக்கம் கேட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல அப்போது அவரிடம் ராஜினாமா கடிதமும் கேட்டு பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நெல்லை மேயர் சரவணனை பொறுத்தவரை இளைஞரணியில் மாவட்ட நிர்வாகியாக இருப்பதால் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மேயர் சரவணன் மீது புகார்களை அடுக்கும் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக நாளை நெல்லை செல்லவுள்ளார் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு. அதன் பிறகு அவர் தலைமைக்கு தெரிவிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் இந்த விவகாரத்தில் முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications