கோயிலில் மோசடி செய்தது எப்படி? பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாதை காவலில் விசாரிக்க மனு
சென்னை: பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் பெயரில் ரூ.34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அமித்ஷா, நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் பகிரப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 30 ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.

என்ன புகார்?
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் பழுதடைந்த சிலைகளை சீரமைத்து தருவதாகக் கூறி நிதி திரட்டி மோசடி செய்ததாக கோயில் செயல் அலுவலர் அரவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆவடி மிட்னமல்லியை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றவியல் போலீசார் காலை கைது செய்தனர்.

வழக்குப்பதிவு
அவரிடம் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் சுமார் 6 மணி நேரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் முடிவில் கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(d) IT Act தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன.

15 நாள் நீதிமன்ற காவல்
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் கார்த்திக் கோபிநாத்தை போலீசார் ஆஜர்படுத்தினர். அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அம்பதூர் விரைவு நீதிமன்ற நீதிபதி, கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஜாமீன் மறுப்பு
இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் கோரி சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பூந்தமல்லி நீதிபதி பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

போலீஸ் மனு
இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து அறிய பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளதால் புழல் சிறையில் உள்ள கார்த்திக் கோபிநாத்தை பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல உள்ளனர். இதனால் செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications