“பிரதமர் மோடி கரூர் வர விரும்பினார்.. அவரே எங்களை அனுப்பினார்.. கலங்கி நின்றேன்” - நிர்மலா உருக்கம்!
கரூர்: "நான் இங்கே வந்தது மாநில அரசு என்ன செய்தது? விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது? என்று பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்ல. யார் தவறு செய்தது என்று என்னால் சொல்ல முடியாது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து வருமாறு பிரதமர் மோடி சொன்னார். அதற்காக வந்துள்ளோம்" என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று கரூரில் விஜய் பிரசாரத்தின் போது நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செப்டம்பர் 27 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, 39 பேர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த மேலும் 2 பேரும் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 குழந்தைகளும் அடக்கம். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் துயரச் சம்பவம் எதிரொலியாக தவெக மற்றும் விஜய் மீது சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இது தொடர்பாக பல அரசியல் கட்சிகள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலில் கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். காவல் துறை அதிகாரிகளிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர்.
பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அவர் கரூருக்கு வர விருப்பப்பட்டாலும், வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்துள்ளார்.
வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவிப்பேன். நான் இங்கே வந்தது மாநில அரசு என்ன செய்தது? விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது? என்று பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்ல. யார் தவறு செய்தது என்று என்னால் சொல்ல முடியாது. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருமாறு பிரதமர் மோடி சொன்னார். அதற்காகவே வந்துள்ளோம். ஆறுதல் கூறவே வந்தோம். இதில் வேறு எதுவும் இல்லை.
பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தை வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டு கலங்கி நின்றேன். இதுபோன்ற சம்பவம் இனி நாட்டில் எங்குமே நடைபெறக்கூடாது. பிரதமர் மோடி அறிவித்த நிவாரண நிதி பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே வந்து சேரும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications