திருச்சி சூர்யாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது! நித்தியானந்தா அறிவிப்பு! கூட்டணி பலமா இருக்கே!
சென்னை: பாஜக ஓபிசி பிரிவின் மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருதை அறிவித்து வழங்கியுள்ளார் நித்தியானந்தா.
திருச்சி சூர்யா சிவா இளைஞர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் கொண்டாடப்படக் கூடியவர் என்பதாலும் இந்துமதத்திற்கு ஆதரவாக அவரது செயல்பாடுகள் இருப்பதாலும் அவரை விருதுக்கு தேர்வு செய்ததாக நித்தியானந்தாவின் ஆசிரமம் காரணம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நித்தியானந்தாவிடம் இருந்து கைலாசா தர்ம ரட்சகர் விருதை பெற தாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என உருகி நன்றி கூறியுள்ளார் திருச்சி சூர்யா சிவா.
ஜெகஜ்ஜால நித்தியானந்தா! சிஷ்யை விஜயபிரியாவுக்கு ஐநாவுக்கான தூதர் புரமோஷன்! நியூயார்க்கில் கூத்து!
திருச்சி சிவா மகன்
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா சிவா அண்மையில் திமுக தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு அக்கட்சியில் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் பதவியை வழங்கினார் அண்ணாமலை. அப்போது முதல் யூ டியூப் சேனல்களில் மாறி மாறி பேட்டிகள் கொடுக்கத் தொடங்கிய அவர், பல சர்ச்சையான கருத்துக்களை கூறி கவனம் ஈர்த்தார்.
யூடியூப் சேனல்
குறிப்பாக திமுக மேல்மட்டத் தலைவர்கள் மற்றும் அவர்களது செயல்பாடுகள் பற்றியெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இது தனது தந்தை திருச்சி சிவாவுக்கு திமுகவில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை தெரிந்தே அவர் இவ்வாறு நடந்துகொண்டார். தந்தை திருச்சி சிவாவிடம் திருச்சி சூர்யா பேசுவதில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதனிடையே ஊடகப் பேட்டிகளில் தன்னை நோக்கி எந்தக் கேள்விகள் வந்தாலும் அதை ஈசியாக எதிர்கொண்டு பாஜகவினரின் பாராட்டை பெற்றார்.
விருது வழங்க காரணம்
இந்நிலையில் இவரது பேட்டிகளை கண்ட நித்தியானந்தா, அதில் அசந்து போய் இப்போது அவருக்கு விருது அறிவித்து அதை காணொலி மூலமே வழங்கியும் உள்ளார். திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருதை வழங்கியுள்ள நித்தியானந்தா, இந்துமதத்திற்கு ஆதரவாக திருச்சி சூர்யா சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இருப்பதாகவும் விருது கொடுத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
நிலுவையில் வழக்குகள்
இதனிடையே இதில் ஹைலைட் என்னவென்றால், நித்தியானந்தா வழங்கும் கைலாசா தர்மரட்சகர் விருதை பெறுவதற்கு தாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்றும் நித்தியை சுவாமி ஜி எனவும் திருச்சி சூர்யா சிவா உருக்கமுடன் தெரிவித்திருப்பது தான். இதனை பாஜகவினரே ரசிப்பார்களா என்பது கேள்விக்குறி தான். ஏனெனில் நித்தியானந்தா மீதான பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதும் அவர் இன்னும் தன்னை தலைமறைவாகவே வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.