32 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாறவில்லை.. சென்னையில் என்ன விலை தெரியுமா?
சென்னை: பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் 32-ஆவது நாளாக இன்று பழைய விலைக்கே விற்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் எள் முனை அளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 106.66, ஒரு லிட்டர் டீசல் ரூ 102.59 க்கு விற்பனையானது. இதுவே பெட்ரோல் டீசல் விற்பனையில் அதிகபட்ச விலையாக இருந்தது.
அன்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 ம், டீசல் விலை ரூ 10 ம் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது.
இதையடுத்து உத்தரப்பிரதே,சம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களால் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிந்தன. ஆனாலும் விலையேற்றம் இல்லை. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. எனினும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை. இதையடுத்து 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22 ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து இந்த விலையேற்றம் இருந்து வருகிறது.
மொத்தம் 33 நாட்களில் 3 நாட்களை தவிர மற்ற நாட்களில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டே வந்தது. கடந்த 6 தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 110.85 க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ 100.94 க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இந்த விலை மாறாமல் தொடர்ந்து 32-ஆவது நாளாக நீடித்து வருகிறது.