கையில காசு இருக்கா? கூகுள் பே-லாம் வேலைக்கு ஆவாது.. டிஜிட்டல் இந்தியாவை சோதித்த சென்னை வெள்ளம்!
சென்னை: சென்னை மழை வெள்ளத்தால், நெட்வொர்க் முடங்கியுள்ள சூழலில், 'டிஜிட்டல் இந்தியா' வொர்க் அவுட் ஆகவில்லை. கையில் பணம் இருந்தால் தான் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாது, பால் பாக்கெட், தண்ணீர் பாட்டிலே கிடைக்கும் சூழல் சென்னையில் உள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதந்தன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது.

மேலும் மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். தொடர்ந்து 72 மணி நேரம் இணைய இணைப்பு, மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்து வருகின்றனர். மழைநீர் வடியாத பல பகுதிகளுக்கு இன்னும் மின்சார விநியோகம் வழங்கப்படவில்லை. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு பலத்த சேதத்தையும் இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது.
நெட்வொர்க் பாதிப்பு: இதனிடையே மக்கள் இன்னொரு பெரிய சிக்கலையும் எதிர்கொண்டு வருகின்றனர். சென்னை மக்கள் மொபைல் போன்களில் நெட்வொர்க் சேவைகள் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற தொலைத் தொடர்பு சேவைகள் கிடைக்காமல் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சார்ஜ் இருந்தும், நெட்வொர்க் கிடைக்காததால், நெருங்கியவர்களுக்கும், நண்பர்களுக்கும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர்.
மேலும், வெளியூர்களில் வசிக்கும், அவர்களது உறவினர்களும், குடும்பத்தினரும், சென்னையில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். மேலும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர். நெட்வொர்க் பிரச்சனை மற்றும், வெள்ளநீர் புகுந்ததன் காரணமாக ஏ.டி.எம் மையங்களும் எங்கும் செயல்படவில்லை.
கையில் கேஷ் இல்லை: கையில் பணம் இல்லாமல், ஏராளமானோர் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வெளியே வந்திருந்தாலும், கையில் ரொக்கமாக பணம் எதுவும் இல்லாததால் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். வண்டிகளுக்கு பெட்ரோல் போட கூட, கையில் கேஷ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் போட முடியும் என்ற நிலை உள்ளது. பணம் இருந்தால் மட்டுமே பெட்ரோல்... ஜி பே, டெபிட் கார்டு அனுமதி இல்லை என பெட்ரோல் பங்குகளில் அறிவிப்பும் ஒட்டப்பட்டு உள்ளது.
செல்போன் நெட்வொர்க் முடங்கியதன் காரணமாக, ஹோட்டல்கள், மளிகை கடைகள் என எங்கும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற எந்தவொரு டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியையும் பயன்படுத்த முடியவில்லை. டீ குடிக்க கூட 'க்யூ ஆர்' கோடை ஸ்கேன் செய்து 10 ரூபாய் அனுப்பி வந்த சென்னை வாழ் மக்கள், இந்த வெள்ளத்தால், டிஜிட்டல் பரிவர்த்தனை முடங்கியதை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
போன வாரம் கூட மோடி சொன்னாரே: அண்மையில், 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேசுகையில், ஒவ்வொருவரும் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு இந்த ஒரு மாதத்திற்கு UPI-ஐ தவிர வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும், ரொக்க பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும். டிசம்பர் மாதம் முழுவதும் UPI மூலம் மட்டும் பரிவர்த்தனைகள் செய்து உங்கள் அனுபவத்தைப் பற்றி எனக்கு தெரிவியுங்கள்" என்று கூறியிருந்தார்.
ஆனால், சென்னை வெள்ளத்தால் ஒட்டுமொத்த இணைய, தொலைத்தொடர்பு சேவையும் முடங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மேற்கொள்ள முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பது இருக்கட்டும், இதுபோன்ற பேரிடர்களில் இணையம் முடங்கினால், பரிவர்த்தனை செய்வதற்கு மாற்று வழியை கண்டறியுங்கள் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications