விஜய் உயிருக்கு ஆபத்து? கரூர் சென்றால் பிரச்சினை வருமா? ஒரே வரியில் அண்ணாமலை கொடுத்த பதில்
சென்னை: கரூர் செல்ல விஜய் போலீஸ் அனுமதி கோரியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க போலீஸ் அனுமதி தேவை என்று தான் கருதவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணி உள்ள நிலையில், அதில் தவெக உள்ளே வருமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைப் பார்க்க விஜய் போலீஸ் அனுமதி கோரியுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

அண்ணாமலை
இது தொடர்பாக அண்ணாமலை மேலும் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்தவொரு இடத்திற்குச் செல்லவும் எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. இதைத் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகிறார்கள்.
சும்மா ஒரு தகவல் தெரிவித்துவிட்டு, தொண்டர்களிடம் சொல்லிவிட்டு நேரடியாகப் போகலாம். இதற்கு டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று பெர்மிஷன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.. . நம் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்தப் பகுதிக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போகலாம். இந்தியாவிற்கும் சில பகுதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு போக வேண்டும். அதுபோன்ற நிலை தமிழகத்தில் இல்லை.
அனுமதி எதற்கு?
அரசியல் தலைவர்கள் தாராளமாகப் போகலாம்.. ஒரு நாள் முன்னாடியே சொல்லிவிட்டுப் போகலாம்.. அவர்களின் பாதுகாப்பு அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். விஜய் கரூர் வரவேண்டும் என்று நினைக்கிறார். நானும் அதே கரூரை சேர்ந்தவன் தான். எங்க ஊர் வருவதற்கு அனுமதி எதற்கு? யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லாரும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கடந்த 10 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி கமல் வரை அனைவரும் வந்து சென்றுள்ளனர். என்டிஏ எம்பிக்கள் குழுவும் வந்துள்ளனர்.
எங்கள் ஊரில் பூதம் எல்லாம் இல்லை. தயவு செய்து வாங்க. வந்து ஊர் மக்களைப் பார்த்துச் செல்லுங்கள். ஆம், கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. தவறு நடந்திருக்கலாம்.. அதற்கான காரணம் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அதற்காக கரூர் சென்றாலே அச்சுறுத்தல் என்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம். கரூர் மக்கள் பற்றி தவறான ஒரு எண்ணத்தைப் பரப்ப வேண்டாம்" என்றார்.
விஜய் உயிருக்கு ஆபத்தா?
விஜய் கரூர் செல்வதற்கு உயிருக்கு ஆபத்து உள்ளது என்று நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு அவர், "மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் என்ன சொன்னார் என்று நான் கவனிக்கவில்லை. நான் மண்ணின் மைந்தராகச் சொல்கிறேன். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். நமது தமிழகத்தை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டாம். அதேநேரம் நயினார் வேறு காரணத்தில் சொல்லி இருக்கலாம்.. எனவே, தயவு செய்து என் பேச்சைத் திருத்தி பார்க்க வேண்டாம்.
கரூர் மாவட்டத்திற்குள் 36 குடும்பங்கள் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். காங்கேயம், தாராபுரம் பகுதிகளிலும் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது போலீசாரும் ஏன் இந்தளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.. இறந்தவர் வீட்டிற்கு அஞ்சலி செலுத்தச் செல்வதால் கூட்டம் கூடினாலும் மக்கள் அமைதியாகத் தான் இருப்பார்கள்.. அந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். அப்படியிருக்கும் போது போலீசாரும் ஏன் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை" என்றார்.
தவெக கொடி
எடப்பாடி பிரச்சாரத்தில் விஜய் கட்சி கொடி இருந்தது குறித்த கேள்விக்கு, "அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. 2026 தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது..உள்ளது யார் எப்படி வருவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். கூட்டத்துக்கு யார் வந்தார்கள் என்று எனக்குத் தெரியாது.. அதை நான் பார்ப்பதும் இல்லை" என்றார்












Click it and Unblock the Notifications