2 வருடத்தில் மனமாற்றம்.. ரஜினிகாந்த் எடுத்த திடீர் முடிவு.. பின்னணியில் இருக்கும் பல்வேறு காரணங்கள்!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017 இறுதியில் அறிவித்த பின் இரண்டு வருடத்தில் அவரின் அரசியல் நோக்கத்திலும், திட்டத்திலும் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017 இறுதியில் அறிவித்த பின் இரண்டு வருடத்தில் அவரின் அரசியல் நோக்கத்திலும், திட்டத்திலும் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் குறித்த அவரின் மனமாற்றத்திற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள்.
Recommended Video
நான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் கட்சி தொடங்கி 2021ல் தமிழகம் முழுக்க 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம். தமிழகத்தில் ஆன்மீக அரசியல் அமைப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் 2017 டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார். கையில் பாபா முத்திரையுடன் மிகவும் தோரணையாக ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் தனது ரசிகர்கள் யாரும் அரசியல் பேச கூடாது, அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க கூடாது. கட்சி தொடங்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார். கண்டிப்பாக ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்றுதான் எல்லோரும் அப்போது எதிர்பார்த்தார்கள்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியாது.. நமக்கும் தெரியாது.. வடிவேல் செம கிண்டல்!
என்ன மாற்றம்
இவ்வளவு உறுதியாக அரசியலுக்கு வருவேன் என்று கூறிய ரஜினிகாந்த், தற்போது தனக்கு முதல்வர் ஆசையே இல்லை, என்னுடைய ரத்தத்திலேயே அந்த ஆசை இருந்தது கிடையாது. சட்டமன்றம் சென்று அங்கு விவாதம் செய்வது எல்லாம் எனக்கு செட்டாகாது. நான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன். ஆட்சிக்கு வேறு ஒரு தலைவர் இருப்பார், நல்ல முதல்வரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
எப்படி
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு, அவர் அரசியலில் இருந்து வெளியேறுவதற்கான அறிகுறி என்று கூறியுள்ளார்கள். அதாவது தனக்கு தீவிர அரசியலில் விருப்பம் இல்லை. வேறு ஒருவரை முன்னிறுத்தவே நான் விரும்புகிறேன், என்னை முதல்வர் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் . எனக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறார்.தன்னுடைய அரசியல் வெளியேற்றத்தை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.
ஆனால் பேட்டி அளித்தார்
அரசியல் குறித்த ரஜினியின் பார்வை கடந்த இரண்டு வருடங்களில் பெரிய அளவில் மாறியுள்ளது, அரசியலுக்கு வருவேன் ஆட்சியை பிடிப்போம் என்று 2017ல் கூறியவர், தற்போது வேறு ஒருவரை முன்னிறுத்துவோம் என்று மனம் மாறி உள்ளார். அவரின் இந்த மனமாற்றத்திற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள். முதலாவதாக அரசியல் குறித்த அறிவிப்பு வெளியிட்டவுடன், ரஜினிகாந்த் அடிக்கடி செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.
மக்கள் விரும்பவில்லை
முக்கிய விஷயங்களில் இவர் நிறைய கருத்து தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சிஏஏ, பாஜக அரசியல் என்று பல விஷயங்களில் கருத்து தெரிவித்தார். ஆனால் இவர் கருத்து தெரிவித்த எல்லா விஷயங்களும் தமிழக மக்களுக்கும், அரசியலுக்கும் எதிராக பார்க்கப்பட்டது. முக்கியமாக இவரின் அரசியலை மக்கள் கடுமையாக எதிர்த்தனர் . போராடவே கூடாது என்று கூறிய ரஜினிகாந்தை மக்கள் கடுமையாக எதிர்க்க தொடங்கினார்கள். அவரின் மனமாற்றத்திற்கு இங்குதான் விதை போடப்பட்டது
கிண்டல் செய்தனர்
அதோடு ஒவ்வொரு பேட்டிக்கு பின்பும் ரஜினியை சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக கிண்டல் செய்தனர் . ஹீரோவாக வலம் வந்தவர், மீம் டெம்ப்லேட் ஆக்கப்பட்டார். யார் நீங்க? தலை சுத்திடுச்சு? 10 பேர் சேர்ந்து எதிர்த்தா யார் பலசாலி? எந்த 7 பேர்? என்று ரஜினி பேசிய விஷயங்கள் எல்லாம் பெரிய அளவில் தாறுமாறாக கலாய்க்கப்பட்டது. இது அவருக்கு மன ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஆன்மீக அரசியல் இல்லை
அதற்கு அடுத்தபடியாக, ரஜினியின் ஆன்மீக அரசியல் தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. மிக முக்கியமாக அவரின் பெரியார் எதிர்ப்பும், பாஜக ஆதரவும் தமிழகத்தில் மோசமாக விமர்சனத்திற்கு உள்ளானது. இதை ரஜினிகாந்த் போக, போக உணர்ந்து கொண்டுதான், எனக்கு காவி சாயம் பூச பார்க்கிறார்கள் என்று கூறினார். இதுவும் அவரின் புதிய நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஆகும்.
அதே ரசிகர்கள் இல்லை
அதேபோல் ரஜினிகாந்த் ரசிகர்களும் அவ்வளவு தீவிரமாக ரஜினியின் அரசியலில் ஆர்வம் செலுத்தவில்லை. பெரும்பாலான ரசிகர்கள் 50+வயது கொண்டவர்கள். மீதம் இருக்கும் பலர் திமுக, அதிமுக விசுவாசிகள். இவர்களை நம்பி தேர்தல் களத்தில் இறங்குவது சரியாக இருக்காது. இவர்களை நம்பி அரசியலில் இறங்கினால் அது பெரிய ரிஸ்க் என்பதும் குறிப்பிடத்தக்கது .
லோக்சபா திமுக வெற்றி
அதெல்லாம் போக, திமுக சட்டசபை தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி அதிமுக, பாஜக இரண்டையும் அசைத்து பார்த்தது. இந்தியா முழுக்க வென்ற பாஜகவால் தமிழகத்தில் திமுகவை வீழ்த்த முடியவில்லை. திமுகவின் விஸ்வரூபம் ரஜினியை யோசிக்க வைத்து இருக்கலாம். தலைமை வெற்றிடம் இருக்கும் என்று நினைத்துதான் ரஜினி அரசியலில் களமிறங்க நினைத்தார்.
திமுக திட்டம் எப்படி
ஆனால் திமுகவின் வெற்றி, அக்கட்சிக்குள் தலைமை வெற்றிடம் எதுவும் இல்லை என்பதை நிரூபித்தது. இதுவும் கூட ரஜினியின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதோடு சட்டசபை 2021 தேர்தலுக்காக திமுக தயார் ஆகும் வேகமும், திட்டமிடலும் ரஜினியை யோசிக்க வைத்து இருக்கலாம். இனிமேல் கட்சி தொடங்கி, சின்னம் அறிவித்து, வேட்பாளர்களை தேர்வு செய்து திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதெல்லாம் இயலாத காரியம் என்று நினைத்து இருப்பார்.
பாஜக ஆதரவு இல்லை
அதேபோல் தமிழகத்தில் மக்கள் பாஜகவிற்கு பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை. ரஜினியை பாஜக தலைவர்கள் சொந்தம் கொண்டாடுவதும், ஆதரிப்பதும் பலருக்கும் பிடிக்கவில்லை. இதை பலர் நேரடியாக விமர்சனம் செய்துள்ளனர். பாஜகவின் பிடியில் இருந்து ரஜினி வெளியே வர வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், விசிக எம்பி தலைவர் திருமாவளவன் ஆகியோர் வெளிப்படையாக அறிவுரை வழங்கி உள்ளனர்.
அண்டை மாநில உதாரணம்
சமீப காலத்தில் தென்னிந்தியாவில் பவன் கல்யாண் தொடங்கி அரசியலில் களமிறங்கிய நடிகர்கள் எல்லாம் தோல்வி அடைந்ததும் ரஜினிக்கு யோசனையை கொடுத்து இருக்கலாம். நாம் சினிமாவைவிட்டு அரசியலுக்கு வந்து, இப்படி தோல்வி அடைந்தால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும். அது சரியாக இருக்காது என்று ரஜினி நினைத்து இருக்கலாம். அரசியலில் வெல்ல வாய்ப்புகள் இருந்தும், பெரிதாக சாதிக்க முடியாத தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இதற்கு ஒரு உதாரணம் ஆவார்.
உடல் மற்றும் வயது ஒரு சிக்கல்
இதெல்லாம் போக, எனக்கு 71 வயதாகிவிட்டது, இனி என்ன செய்ய முடியும், எனக்கு உடலில் பல பிரச்சனைகள் இருக்கிறது என்று நேற்றே ரஜினிகாந்த் வெளிப்படையாக கண்களில் கண்ணீருடன் தனது வயது குறித்து பேசிவிட்டார். இனிமேல் அரசியலுக்கு வந்து, இந்த உடல் நிலையோடு எப்படி தீவிரமாக செயலாற்றுவது என்று ரஜினி நினைத்து இருக்கலாம். இதெல்லாம் அரசியலில் இருந்து மெல்ல மெல்ல விலகும் முடிவை அவர் எடுக்க காரணமாக இருக்கலாம்!
அவரின் அரசியலுக்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும், இன்னும் அவர் படங்களை பல கட்சியினர் எந்த வேறுபாடும் இன்றி பார்த்துதான் வருகிறார்கள். அவரின் இடம் இதுதான்.. அங்கு அவர் இப்போது நின்னு விளையாடலாம்!