முன்வைத்த காலை பின் வைக்கமாட்டேன்... போட்டியிலிருந்து ஒதுங்க மறுக்கும் ஓ.பி.ஆர்.
சென்னை: பிப்ரவரியில் நடைபெறும் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்குமார்.
இதற்காக அவர் கோவில்களில் சிறப்பு பூஜைகளை நடத்துவதுடன், அதற்கான லாபியையும் ஒரு பக்கம் நடத்தி வருகிறார்.
கடந்த முறையே மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த ரவீந்தரநாத் குமாருக்கு வைத்திலிங்கம் எம்.பி. போட்டியாக வந்தார்.

ஒரு எம்.பி.
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் அதிமுகவில் இருக்கும் ஒரே மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் குமார் மட்டுமே. இதனால் பாஜகவின் கூட்டணிக் கட்சி அதிமுக என்ற கோட்டாவில் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என ஏக எதிர்பார்ப்பில் இருந்தார் அவர்.

போட்டி
ஆனால் அவருக்கு போட்டியாக வைத்திலிங்கம் எம்.பி.தனக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டதால் அதிமுகவில் யாருக்குமே அந்த பதவியை பாஜக வழங்கவில்லை. ஓ.பி.எஸ். மகனுக்கு கேட்டது போல், இ.பி.எஸ்.தரப்பு வைத்திலிங்கத்துக்கு கேட்டது. இதனால் எதற்கு வம்பு என்று யாரையும் மத்திய அமைச்சரவையில் பாஜக சேர்க்கவில்லை.

மாற்றம்
இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தமிழகத்திற்கு ஒரு பிரதிநிதியை கொடுக்க முடிவு செய்துள்ளார் பிரதமர் மோடி. இதனால் யார் அந்த பிரதிநிதி, யாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்பது தான் இப்போது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவில்கள்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத்குமார் எப்பாடுபட்டாவது இந்த முறை மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துவிட வேண்டும் என நினைக்கிறார். இதற்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள தனது குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தியதுடன் இப்போது மேலும் சில கோவில்களுக்கு சென்று மனம் உருக பிரார்தித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications