சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி.. அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்.. ஓபிஎஸ்-எடப்பாடி வெளியிட்ட கூட்டறிக்கை
சென்னை: 2021 சட்டசபை தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி அப்படியே தொடர்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அந்த கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

கூட்டணிக்குள் குழப்பம்
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன், அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை என்ற எண்ணம் எங்களுக்கும் இருக்கிறது என்று தெரிவித்தார். 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டதா என்று மக்களிடையே குழப்பம் ஏற்பட இந்த கருத்துக்கள் காரணமாக இருந்தன. இந்த நிலையில், ஓபிஎஸ்-எடப்பாடி பழனிச்சாமி இணைந்து இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதை பாருங்கள்.

வலுவான கூட்டணி
தமிழ் நாட்டில் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடத்திய பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டது. கழகத்தின் மக்கள் தொண்டில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் கொண்ட பல்வேறு அமைப்புகளும், தோழமை இயக்கங்களும் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்தன.

குறைந்த வாக்கு வித்தியாசம்
தொடர்ந்து பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் எதிர்காலம் சிறக்கவும் எண்ணற்ற பணிகளை ஆற்றியது. இந்தப் பணிகளுக்கெல்லாம் பாராட்டு தெரிவிப்பதுபோல, தமிழ் நாட்டு வாக்காளர்கள் அளித்த பேராதரவு காரணமாக 75 சட்டமன்ற உறுப்பினர்கள் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களாக இன்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். வெறும் 3 விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில்தானே கழகம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாம் ஆட்சியை இழந்திருந்தாலும், மக்களின் பேரன்பு கழகத்திற்கு தொடர்கிறது.

அரசியல் வாழ்வு லட்சியப் பயணம்
தேர்தல் முடிவுகள் சற்றே தொய்வையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தி இருந்தாலும், கொண்ட கொள்கையின் காரணமாகவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது நாம் கொண்ட விகவாசம் காரணமாகவும், கழகத் தோழர்களின் பொது வாழ்வு என்னும் புனிதப் பயணம் வீருநடை போடுகிறது. இப்பொழுது நாம் ஆற்ற வேண்டிய பணிகள் நம் முன் அணிவகுத்து நிற்கின்றன. அரசியல் வாழ்வு என்பதே இடைநிற்றல் இல்லாத லட்சியப் பயணம் தானே! இலக்கினை அடையும் வரை வீரனுக்கு எது ஓய்வும், சோர்வும்! நம் இதயத்தின் தசையெல்லாம் புரட்சித் தலைவரின் அரசியல் பாடம் மட்டுமே. நம் கண்முன் தெரிவதெல்லாம் புரட்சித் தலைவி அம்மாவின் பூமுகம் தான்.

இருள் சூழ்ந்துள்ள தமிழ்நாடு
நம் இலக்கு புரட்சித் தலைவியின் பொற்கால அரசை மீண்டும் அமைப்பதும், எதிரிகளால் இருள் சூழ்ந்திருக்கும் தமிழ் நாட்டை ஒளிமயமான பொன்னுலகிற்கு இட்டுச் செல்வதாக மட்டுமே இருக்கிறது. வேறு எந்த சிந்தனையும் நம் மனதில் ஏற்படத் தேவையில்லை.

கூட்டணி தொடருகிறது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்பதிலும்; நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து, தமிழ் நாட்டின் உயர்வுக்கென உழைப்போம் என்பதிலும், யாருக்கும், எப்போதும், எவ்வித ஐயமும் எழத் தேவையில்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications